ஊராட்சியில் திருட்டு மின்சாரம் உபயோகம்: 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

காஞ்சிபுரம்:திருட்டு மின்சாரத்தை பயன்படுத்தும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது, 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எரிசக்தி துறையினருக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊத்துக்காடு ஜெ.எஸ்., நகர், விஜயா கார்டன், டெட் ராய் சிட்டி உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில், தெரு விளக்குகளுக்கு மின் இணைப்பு பெறாமல், திருட்டு மின்சாரத்தை ஊராட்சி நிர்வாகம் உபயோகப்படுத்தி வருகிறது .

இதற்கு, மின் வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைக்கு பதிலாக, மின் வாரியம் அதிகாரிகள், தொடர் அழுத்தத்தின் பேரில், ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுத்து, 18,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதை ரத்து செய்து, ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சி மனோகரன் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆஷா என்பவர், 30 நாட்களுக்குள் பதில் அளிக்க எரிசக்தி துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளார்.

Advertisement