2 வயது குழந்தையை கடத்திய சென்னை தம்பதி சுற்றிவளைப்பு

துாத்துக்குடி: குழந்தை இல்லாத ஏக்கத்தில், சென்னையை சேர்ந்த தம்பதியால், பைக்கில் கடத்தப்பட்ட, 2 வயது சிறுவனை, 20 நிமிடங்களில் போலீசார் மீட்டனர்.

துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், காவடிபுரம் தெருவை சேர்ந்த கார்த்திக் --- முத்து செல்வி தம்பதி, அப்பகுதியில் கூல்டிரிங்ஸ் கடை நடத்தி வருகின்றனர். தம்பதியின், 2 வயது ஆண் குழந்தை நேற்று கடை முன் விளையாடிக் கொண்டிருந்தது.

அந்த வழியாக பை க்கில் வந்த ஒரு தம்பதி , திடீரென அந்த குழந்தையை துாக்கி கொண்டு வேகமாக சென்றனர்.

குழந்தை கடத்தப்பட்டதை அறிந்ததும், கூச்சலிட்ட முத்துசெல்வி, உடனடியாக குலசேகரன்பட்டினம் போலீசுக்கு தெரிவித்தார்.

போலீசார் உஷார்படுத்தப்பட்ட நிலையில், குலசேகரன்பட்டினம் --- திருச்செந்துார் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, பைக்கில் குழந்தையுடன் வேகமாக சென்ற தம்பதியை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அவர்கள், சென்னை, பள்ளிக்கரணையை சேர்ந்த லிங்கதுரை, 43, அவரது மனைவி ஜெயந்தி, 39, என, தெரியவந்தது.

திருமணமாகி, 11 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த தம்பதி, குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு நேற்று பைக்கில் வந்துள்ளனர்.

கடை முன் தனியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கண்டதும், இருவரும் திட்டமிட்டு கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது. கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.

கடத்தப்பட்ட குழந்தையை, 20 நிமிடங்களில் மீட்ட போலீசாருக்கு, அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement