கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு தொடக்கம்; 5 தொகுதிகள் கேட்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி

22


சென்னை: தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளுடன் 7 பேர் கொண்ட திமுக குழுவினர் பேச்சு நடத்தினர். தேர்தலில் போட்டியிட 5 தொகுதிகள் தருமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கோரிக்கை விடுத்து உள்ளது.


தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்., - ம.தி.மு.க., - வி.சி., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் உள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க.,வும் இணைந்துள்ளது.


இந்நிலையில், சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த, தி.மு.க., பொருளாளர் பாலு தலைமையில், அமைச்சர்கள் நேரு, வேலு, பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலர்கள் சிவா, ராஜா, அமைப்பு செயலர் பாரதி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதல்நாளான இன்று (பிப்ரவரி 22) தொகுதி பங்கீடு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளுடன் 7 பேர் கொண்ட திமுக குழுவினர் பேச்சு நடத்தினர்.


5 தொகுதிகள் கேட்டோம்!



திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்த பிறகு காதர் மொய்தீன் கூறியதாவது: திமுகவிடம் 5ம் தொகுதிகள் கேட்டுள்ளோம். 5 தொகுதிகள் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் 4 தொகுதிகள் கொடுக்குமாறு கேட்டுள்ளோம். கடந்த தேர்தலில் கொடுத்த 3 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்பதை கருத்தில் கொள்ள திமுக வலியுறுத்தி உள்ளது.


3 தொகுதிகளில் ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க திமுக வலியுறுத்தி உள்ளது. கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு வருவதாக கூறியுள்ளோம். திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம். தொகுதிகள் கூடுதலாக வருகிறதோ, குறைவாக வருகிறதோ என்பது கவலையில்லை. இவ்வாறு காதர் மொய்தீன் கூறினார்.


மயங்கி விழுந்தார்

பேச்சுவார்த்தை முடிந்து பேட்டி அளித்துக் கொண்டிருந்த காதர் மொய்தீன், அண்ணா அறிவாலயத்தில் மயங்கி விழுந்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

மதிமுகவுக்கு நாளை அழைப்பு




மதிமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு நாளை (பிப்ரவரி 23) பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்துள்ளது. கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக இந்த முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்க திட்டமிட்டு இருக்கும் நிலையில் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வரும் பிப்ரவரி 26ம் தேதி பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்துள்ளது.

Advertisement