பாக்., எல்லை அருகே இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் துப்பாக்கிச் சூட்டில் பலி; பயங்கரவாதிகள் செயலா என விசாரணை

1


சண்டிகர்: பாகிஸ்தான் எல்லை அருகே புறக்காவல் நிலையத்தில், கண்காணிப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தனர். இந்த சம்பவம், பஞ்சாப் மாநில போலீசாரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வந்து சுட்டுக் கொலை செய்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.


பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பதவி வகித்தவர் குர்னாம் சிங். அண்டை மாநிலமான பாகிஸ்தான் எல்லையில் இருந்து இரண்டு கி.மீ., தூரத்தில் உள்ள அதியன் புறக்காவல் நிலையத்தில், குர்னாம் சிங் மற்றும் போலீஸ்காரர் அசோக் குமார் ஆகிய இருவரும் கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்தனர்.

புறக்காவல் நிலையத்தில் இருவரும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தனர். தகவல் அறிந்து, குருதாஸ்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். இரு உடல்களும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பாகிஸ்தான் எல்லையில் உள்ள புறக்காவல் நிலையங்கள், எல்லைப் பாதுகாப்புப் படையுடன் இணைந்து கண்காணிப்பு பணியை செய்து வருகிறது. இந்நிலையில், இரண்டு போலீசார் கொல்லப்பட்டு இருப்பது பஞ்சாப் மாநில போலீசாரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

குர்தாஸ்பூர் உதவி எஸ்.பி., ஆதித்யா கூறுகையில், “இன்ஸ்பெக்டரும் போலீஸ்காரரும் இறந்து கிடப்பதாக காலையிலேயே தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர்,”என்றார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். இந்த சம்பவம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.


தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் இரண்டு போலீசாரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். நம் மக்கள், மாநிலம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் பாரபட்சமாகவோ அல்லது பிளவுபட்டோ இருக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வந்து இருவரையும் சுட்டுக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

பாக்., எல்லை அருகே 2 பேர் கைது



பஞ்சாபில், அண்டை நாடான பாகிஸ்தான் எல்லை அருகே இரண்டு ஆயுதக் கடத்தல்காரர்களை கைது செய்த போலீசார், ஐந்து அதிநவீன கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். அதேபோல, போதைப் பொருள் கடத்திய ராணுவ வீரர் உட்பட 6 பேரும் பிடிபட்டனர்.

இது குறித்து, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது: அமிர்தசரஸில் அண்டை நாடான பாகிஸ்தான் எல்லை அருகே, ஆயுதக் கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, ஐந்து அதிநவீன கைத்துப்பாக்கிகள் மற்றும் 10 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இருவர் மீதும் அமிர்தசரஸ் கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சட்ட விரோத ஆயுதக் கடத்தல் கும்பலை முறியடிக்கவும், பஞ்சாப் மாநிலம் முழுவதும் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் போலீஸ் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ராணுவ வீரர் கைது




அதேபோல, பரித்கோட் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு ராணுவ வீரர், பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு போலீஸ்காரர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4.8 கிலோ ஹெராயின், ஒரு கைத்துப்பாக்கி, ஜீப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆறு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement