அதிமுக ஒன்றுபட யாரும் முயலவில்லை: திருமாவளவன்

15


திருவள்ளூர்: ' 'ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வை உருவாக்க யாரும் முன்வரவில்லை,'' என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.


அவர் அளித்த பேட்டி: மதத்தின் பெயராலும் தீண்டாமை கடைபிடிக்கிற பா.ஜ.,வை தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் அவர்களை தேர்தல் களத்தில் வீழ்த்த வேண்டும்.ஜெயலலிதாவுக்கு பின், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்பது எங்களுடைய கருத்தாக இருந்தது. ஆனால், ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வை உருவாக்க யாரும் முன்வரவில்லை.


தே.மு.தி.க.,வும், இப்போது தி.மு.க., கூட்டணியில் இணைந்துள்ளது. அது மகிழ்ச்சி. அக்கட்சிக்கு எவ்வளவு சீட் கொடுப்பர் என்பது தெரியாது. ஆனால், அவரவர் சக்திக்கேற்ப தேவையான தொகுதிகளை, தி.மு.க., தலைமை வழங்கும். ராமதாஸ் தரப்பு பா.ம.க.,வை தி.மு.க., கூட்டணியில் சேர்க்கக்கூடாது என எந்த இக்கட்டையும், கூட்டணி தலைமைக்கு நாங்கள் தரவில்லை. கூட்டணிக்கு அக்கட்சி தேவையென்றால், தி.மு.க., தான் அந்த முடிவையும் எடுக்கும்.


இருந்தபோதும், 2011க்குப் பின், பா.ம.க.,வும் பா.ஜ.,வும் சமூக ரீதியில் வெறுப்பு அரசியலை முன்னெடுத்ததாலேயே, அக்கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என முடிவெடுத்தோம். த.வெ.க., தலைவர் விஜய் அரசியலில் மாற்றம் ஏற்படுத்துவார் என்பது வெறும் யூகம் மட்டுமே. அவரால் ஆட்சி மாற்றமெல்லாம் ஏற்படுத்த முடியாது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement