உ.வே.சா., இல்லாவிட்டால் நமக்கு தமிழின் தொன்மை தெரிந்திருக்காது!

2


சென்னை: “உ.வே.சாமிநாத அய்யர், பழந்தமிழ் நுால்களைத் தேடிப்பிடித்து பதிப்பிக்காமல் இருந்திருந்தால், தமிழின் தொன்மை நமக்கு தெரிந்திருக்காது,” என, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் பேசினார்.


டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் நுால் நிலையம் மற்றும் சாகித்ய அகாடமி சார்பில், 'வ.உ.சி., பதிப்புப் பணி' எனும் தலைப்பில், சென்னை கோட்டூர்புரம், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று இலக்கிய கருத்தரங்கம் நடந்தது.

இலக்கியம்




இதில், உ.வே.சா., நுால் நிலையம் பதிப்பித்த 'தொல்காப்பியம் - சொல்லதிகாரம் மூலமும் உரையும்' என்ற நுாலை, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் கோ.விஸ்வநாதன் வெளியிட்டார். 'தினமலர்' நாளிதழின் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டார்.


நிகழ்ச்சியில், கோ.விஸ்வநாதன் பேசியதாவது: உ.வே.சா., பழந்தமிழ் இலக்கியங்களை தேடித்தேடி பதிப்பித்தார். அவர் இல்லாவிட்டால், பழந்தமிழ் இலக்கியங்கள் சுவடிகளிலேயே மடிந்திருக்கும். அதனால், தமிழின் தொன்மையை அறிந்திருக்க முடியாது.


தமிழில் முதல் இலக்கண நுாலாக தொல்காப்பியம் அறியப்படுகிறது. அதன் காலம், பொ.ஆ.மு., 5ம் நுாற்றாண்டு என்கின்றனர். ஒரு மொழியில், இலக்கியம் வந்த பின்தான் இலக்கணம் வரும். தமிழில், 2,500 ஆண்டுகளுக்கு முன் இலக்கணம் இருந்திருக்கிறது. உலகில் வேறு எந்த மொழிக்கும் இப்படிப்பட்ட சிறப்பு இல்லை. அப்படிப்பட்ட பழமையான ஏழு செம்மொழிகளில், இன்றும் பேசிப்புழங்கும் மொழியாக, தமிழ் உள்ளது தான் நமக்கு பெருமை.

உ.வே.சா., நுாலக சேகரிப்பில், உரையாசிரியர் யாரென்று தெரியாத நிலையில் இருந்த தொல்காப்பிய சொல்லதிகார நுால் பதிப்பிக்கப்பட்டு, தற்போது வெளியிடப் பட்டுள்ளது.
மாணவர்கள், இதுபோன்ற பழந்தமிழ் சுவடிகளை படித்து பதிப்பிக்க வேண்டும். அத்துடன், தினமும் செய்தித்தாள்களையும் படித்து, நாட்டு நடப்புகளையும், சமூகத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.

வரலாறு




படிப்பு முடிவுறாதது. நான், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல் பாடங்களை படித்தவன். ஆனால், தொழில்நுட்ப கல்லுாரிகளை நடத்துகிறேன்.
அதற்காக, கடந்த 41 ஆண்டுகளாக தொடர்ந்து படிக்கிறேன். அப்படி, மாணவர்களும் புதிய விஷயங்களை கற்க ஆர்வமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


கருத்தரங்கத்தின் நோக்கம் பற்றி, தமிழ் பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் இ.சுந்தரமூர்த்தி பேசியதாவது: வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சுதந்திர போராட்டம், சுதேசி கப்பல் போக்குவரத்து, சிறையில் செக்கிழுத்த செய்திகள் பெரும்பாலானோருக்கு தெரியும். வாரி வாரி வழங்கிய வள்ளலான அவர், தமிழை பதிப்பிக்க, ஒவ்வொருவரிடமும் யாசித்த சோக வரலாறு பலருக்கும் தெரியாது.

கடந்த 1908ல் சிறையில் அடைக்கப்பட்ட வ.உ.சிதம்பரம், திருக்குறளையும் தொல்காப்பியத்தையும் படித்தார். அதன்பின், தொல்காப்பியத்தின் கருத்தியலை வியந்ததுடன், பொருளதிகாரத்தின் கடினத்தன்மையை அறிந்து, அதற்கு உரை எழுத திட்டமிட்டு, சில இயல்களுக்கு உரையும் எழுதினார்.

அதன்பின், இளம்பூரணர் எழுதிய உரையின் ஏட்டுப் பிரதிகளை, கனகசுந்தரம் பிள்ளையிடம் இருந்து பெற்றார். அவற்றைக் கண்ட பின், உரை எழுதும் முயற்சியை கைவிட்டு, இளம்பூரணர் உரையை பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமையியல் மற்றும் எழுத்ததிகார உரைகளை பதிப்பித்தார்.

தேசியம்





சிவஞான போதத்துக்கு உரை எழுதி பதிப்பித்தார். பதிப்பித்த பின், தன் புத்தகத்தின் தாள், அச்சு மை, நுால் உள்ளிட்டவை தேசியம் சார்ந்தவை என எழுதினார். அப்படி, பாசாபிமானம், தேசாபிமானம், மாதாபிமானம் உள்ள வராக அவர் இருந்தார்.

ஆனால், அவர் பதிப்பிப்பதற்காக, வெண்பா எழுதி யாசகம் கேட்டதாகவும், தன் மகளின் திருமணத்தை விட, பதிப்புப் பணிக்காகவே அதிகம் கஷ்டப்பட்டதாகவும் அவர் பதிவு செய்துள்ளதை வாசித்து கண்ணீர் வடித்தேன். அப்படிப்பட்டவரின் இலக்கியப் பணிகளின் பேருருக்காட்சியை, இந்த கருத்தரங்கம் ஆராயும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், உ.வே.சா., நுால் நிலைய ஆட்சிக்குழு உறுப்பினர் சிவாலயம் ஜெ.மோகன் பேசுகையில், “உ.வே.சா., நுாலகம், இந்தாண்டு மட்டும், 25 புதிய நுால்களை பதிப்பித்துள்ளது. இது, 26வது நுால்,” என்றார்.

நிகழ்ச்சியில், நுாலகத்தின் செயலர் தி.சத்தியமூர்த்தி, காப்பாட்சியர் சுயம்பு, 'தொல்காப்பியம் - சொல்லதிகாரம் மூலமும் உரையும்' நுாலின் பதிப்பாசிரியர் கிருஷ்ணமூர்த்தி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியர் சதீஷ், சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லுாரி இணை பேராசிரியர் பலராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement