பிரிட்டன் விருதை வென்றது இந்திய திரைப்படம்
லண்டன்:'பாப்டா' எனப்படும் 'பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அண்டு டெலிவிஷன் ஆர்ட்ஸ்' அமைப்பு வழங்கும் விருதுகளில், சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்ப திரைப்படத்திற்கான விருதை, மணிப்பூரி மொழி திரைப்படமான 'பூங்' வென்றுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த பாப்டா அமைப்பு, சிறந்த தேசிய மற்றும் சர்வதேச படங்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்குகிறது. ஆஸ்கருக்கு இணையானதாக இந்த விருது கருதப்படுகிறது. பிரிட்டன் தலைநகர் லண்டனில், நேற்று இரவு, 79வது 'பாப்டா' விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த ஆண்டு விழாவில், பிரபல பாலிவுட் இயக்குநரும், நடிகருமான பர்ஹான் அக்தரின் தயாரிப்பில் மணிப்பூரி மொழியில் உருவான, 'பூங்' திரைப்படம் விருது வென்று சாதனை படைத்துள்ளது. சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்ப திரைப்படப் பிரிவில், 'லிலோ அண்டு ஸ்டிச், ஆர்கோ, ஸூட்ரோபாலிஸ் 2' போன்ற சர்வதேச படங்களுடன் போட்டியிட்ட நிலையில், விருதை பூங் தட்டிச் சென்றது.
பிரிந்து சென்ற தன் தந்தையை மீண்டும் அழைத்து வந்து சேர்ப்பது, தாய்க்கு சிறந்த பரிசாக இருக்கும் என்று நினைக்கும் ஒரு சிறுவனின் கதையை, பூங் படம் சொல்கிறது. கடந்த 2024 டொரன்ட்டோ சர்வதேச திரைப்பட விழாவில், டிஸ்கவரி பிரிவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. மேலும் வார்சா சர்வதேச திரைப்பட விழா, மும்பை திரைப்பட விழா மற்றும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா போன்றவற்றிலும் திரையிடப்பட்டது.
அறிமுக இயக்குநர் லட்சுமிப்ரியா தேவி மற்றும் தயாரிப்பாளர்கள் அக்தர், சித்வானி ஆகியோர், பாப்டா விருதை பெற்றுக் கொண்டனர். அப்போது பேசிய இயக்குநர் தேவி, இந்திய சினிமா உலகளாவிய தளத்தில் அங்கீகரிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார்.
பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த 'ஒன் பேட்டில் ஆப்டர் அனெதர்' படம் ஆறு விருதுகளை வென்றது. பாப்டா தலைவர் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
ஹிந்தியில் பேசிய ஆலியா!
பாப்டா விருது வழங்கும் விழாவில், இந்திய நடிகை ஆலியா பட் பங்கேற்றார். அப்போது ஹிந்தியில் பேசிய அவர், “படங்கள் பல்வேறு மொழிகளை பேசினாலும், நாம் எப்போதும் கொண்டாடுவது சினிமாவின் மொழியைத்தான்,” என்று கூறினார். இவர், சில பிரிவுகளுக்கான விருதுகளை வழங்கினார்.