ரேபிஸ் பாதிப்பு அச்சம்: மஹாராஷ்டிராவில் வங்கி ஊழியர் தற்கொலை

மும்பை: தெரு நாய் கடித்ததால் தமக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அதீத பயம் காரணமாக, 30 வயதான வங்கி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது மோசமான சம்பவம் மஹாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவின் கல்யாண் பகுதியை சேர்ந்தவர் ஆயுஷ் விஸ்வநாத் அமின் 30, இவர், தனது குடும்பத்துடன் சஹாஜீவன் சொசைட்டியில் வசித்து வந்தார். அமின் கடந்த 8 ஆண்டுகளாக பாரத் வங்கியின் தானே கிளையில் பணிபுரிந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று அமின் காலில் கடித்துள்ளது. அதனை தொடர்ந்து அவர் ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த நான்கு நாட்களில் அவரது நடத்தையில் அசாதாரண மாற்றங்களைக் குடும்ப உறுப்பினர்கள் கவனித்ததாகக் கூறப்படுகிறது.அதை தொடர்ந்து நேற்று முன்தினம் (பிப்ரவரி22) அன்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது, அமின் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ நடந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது, ரேபிஸ் அறிகுறிகள் உருவாகும் என்ற பயத்தை குறிப்பிட்டு அமின் ஒரு தற்கொலை குறிப்பை போலீசார், அந்த வீட்டிலிருந்து மீட்டனர்.

மூத்த போலீஸ் அதிகாரி குரவ் கூறியதாவது:
கோல்சேவாடி போலீஸ் ஸ்டேஷனில் விபத்து இறப்பு அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றார்.


மருத்துவ நிபுணர்கள் கூற்றுப்படி, ரேபிஸ் என்பது ஒரு ஆபத்தான நோய் என்றாலும், நாய் கடித்தவுடன் முறையான மற்றும் முழுமையான தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் அதை நுாறு சதவீதம் தடுக்க முடியும் என தெரிவிக்கின்றனர்.

Advertisement