கோவில் சொத்துக்களை பாதுகாக்க தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: சென்னை ஐகோர்ட் அறிவுரை

4

சென்னை : 'கோவில் சொத்துக்களை, ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க தவறிய அதிகாரிகள் மீது, அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



சேலம் மாவட்டம், ஓமலுாரில், புகழ்பெற்ற கண்ணனுார் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 3.63 ஏக்கர் நிலங்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், கடந்த 2021ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் வே.சபர்மதி நேரில் ஆஜராகி, ஆக்கிரமிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, விளக்கம் அளித்தார்.


அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு, 5.5 லட்சம் ஏக்கருக்கு அதிகமான நிலங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவற்றை பாதுகாக்கவே, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், கோவில் நிலங்கள், சொத்துக்களை பாதுகாக்கும் பணியை, அறநிலையத்துறை அதிகாரிகள் சரியாக மேற்கொள்ளவில்லை. உங்களின் பணிக்கு, ஏன் துரோகம் செய்கிறீர்கள்.அதிகாரிகளின் அலட்சிய போக்கால்தான், மாநிலத்தில் உள்ள கோவில்களின் நிலங்கள், சொத்துக்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. கோவில் சொத்துக்களை பாதுகாக்க தவறிய, அதிகாரிகளின் அலட்சிய போக்கை அனுமதிக்க முடியாது.


கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து, பாதுகாக்க தவறிய அதிகாரிகள் மீது, அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிலங்களை ஆக்கிரமித்து, கோவிலுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய அதிகாரிகளிடம் இருந்து, அந்த இழப்பீட்டை வசூலிக்க வேண்டும்.இன்றைய சூழலில், பெரும்பாலான இளைஞர்கள், தங்களின் வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே, கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதுபோன்ற நபர்களுக்கு, மூன்று நேரமும், தரமான, சுவையான உணவு வழங்க, அறநிலையத்துறை எடுக்கும் நடவடிக்கை, சிறந்த சேவையாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement