மார்ச் 1 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்; ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

5

நமது நிருபர்

ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரையை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மார்ச் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, பல்வேறு சங்கத்தினரும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அடங்கிய ஜாக்டோ ஜியோ சங்கத்தினரின் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்த அரசு, அவர்களது போராட்டத்தை முடித்து வைத்துள்ளது.

தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாத சில சங்கத்தினர், இன்னும் தொடர்ந்து போராடி வருகின்றனர். ரேஷன் கடை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா கூறியதாவது;
நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் உள்ள எடை தராசும், ரேஷன் கடையில் உள்ள விற்பனை முனையத்தையும் இணைத்து அதனடிப்படையில் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். தமிழக அரசு ஐ.ஏ.எஸ்., தலைமையில் அமைத்த ஊதிய மாற்ற கமிட்டி பரிந்துரையை உடனே வெளியிட்டு எங்களுக்கு இளநிலை உதவியாளர் சம்பளம் ரூ.19 ஆயிரத்து 500தரக் கோரிக்கை வைத்துள்ளோம். பிளஸ் 2 கல்வித் தகுதி அடிப்படையில் பணிபுரிகிறோம். அதே போல் எடையாளருக்கு அலுவலக உதவியாளர் சம்பளம் தர வேண்டும்.

பொது வினியோக திட்டத்தை தனித் துறையாக அறிவிக்க வேண்டும். ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதியின்றி ஊழியர்கள் திண்டாடுகின்றனர். கழிப்பறை கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதி அப்படியே உள்ளது. முதற்கட்டமாக மாற்றுத்திறனாளி, பெண் ஊழியர்களுக்காவது அதனை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும். பணிவரன் முறைப்படுத்தாத பணியில் இருக்கும் போது இறந்த ரேஷன் கடை பணியாளர் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்.

தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு வீடாக பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு ரேஷன் கார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப தொகை வழங்காமல் எடையாளர் ஊதியம், ஏற்று கூலி, இறக்கு கூலி, மினி லாரி வாடகை ரேஷன் கடை பணியாளருக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்பட உள்ளது, என்றார்.

Advertisement