'நீதித்துறையில் ஊழல்' என்ற தலைப்பில் பள்ளியில் பாடம்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் அதிருப்தி

61

புதுடில்லி: நீதித்துறையில் ஊழல் என்னும் பாடம் என்.சி.இ.ஆர்.டி., பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டதற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


@என்.சி.இ.ஆர்.டி., வெளியிட்டுள்ள எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்பது தொடர்பான பாடம் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம், உச்சநீதிமன்றத்தில் இன்று எதிரொலித்தது.
இன்று நீதிமன்றம் கூடியதும், தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் மூத்த வக்கீல் கபில் சிபல் புகார் எழுப்பினார். 'நீதித்துறையில் நடக்கும் ஊழல்கள் பற்றி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம் என்று கபில் சிபல் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது:
நீதித்துறைக்கு யாரும் களங்கம் கற்பிப்பிதை நான் அனுமதிக்க மாட்டேன். இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். நீதித்துறையின் தலைவர் என்ற முறையில் நான் என் கடமையை செய்கிறேன். இது ஒரு திட்டமிட்ட செயல் என தோன்றுகிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியும். இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

தன் கடும் அதிருப்தியை பதிவு செய்வதாக கூறிய தலைமை நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று மாலை இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement