சுரங்க துறை அதிகாரி வீட்டில் ரூ.4.27 கோடி பணம் பறிமுதல்
புவனேஸ்வர்: ஒடிசாவில், 30,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்ட சுரங்க துறை அதிகாரி வீட்டில் இருந்து, கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்த, 4.27 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள சுரங்கத் துறையில் துணை இயக்குநராக பணிபுரிபவர் தேபப்ரதா மொஹந்தி. நிலக்கரி சுரங்கங்களுக்கு உரிமம் பெறுவதற்கு இவரது கையெழுத்து அவசியம் என்பதால், மிகவும் செல்வாக்கு மிக்க அதிகாரியாக வலம் வந்தார்.
சோதனை
சமீபத்தில் நிலக்கரி சுரங்கத்துக்கு அனுமதி தரக் கோரி, ஒருவர் விண்ணப்பித்திருந்தார். அவரிடம், உரிமம் வழங்க தேபப்ரதா மொஹந்தி 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
உரிமம் கோரியவர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
அவர்களின் அறிவுறுத்தலின்படி, தேபப்ரதாவுக்கு நிலக்கரி விற்பனையாளர் லஞ்சம் தர முயன்ற போது, அதிகாரிகள் அவரை கையும் களவுமாக நேற்று முன்தினம் பிடித்தனர்.
இதையடுத்து, நடத்தப்பட்ட சோதனையில், அவரது மேஜை டிராயரில் இருந்து 1.20 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தேபப்ரதாவின் புவனேஸ்வர் வீட்டிலும், பத்ராக் மாவட்டத்தில் அவரது பெற்றோர் வசிக்கும் வீட்டிலும், அவரது அலுவலகத்திலும் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது, பைகளிலும், அலமாரிகளிலும் கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
முதல்கட்ட தகவலின்படி 4.27 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஊழல் வழக்கு
இதுகு றித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் யஷ்வந்த் ஜெத்வா கூறுகையில், ''தேபப்ரதா மீது ஏற்கனவே பல லஞ்ச புகார்கள் உள்ளன.
''கடந்த 2009ல், அவர் மீது ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநில வரலாற்றில், ஊழல் வழக்கில் அதிகளவு பணம் கைப்பற்றப் பட்டது இதுவே முதல்முறை,'' என்றார்.
மேலும்
-
ஜே.இ.இ., முதன்மை தேர்வு தமிழக மாணவர் 2ம் இடம்
-
கோடை சாகுபடியை தவிர்க்க விவசாயிகளுக்கு அறிவுரை
-
இலவச மொபைல் விண்ணப்பங்கள் வரவேற்பு
-
2025ல் அரசு போக்குவரத்து கழகங்களில் 1,444 விபத்துகள்; 463 பேர் உயிரிழப்பு
-
தலைமை தேர்தல் கமிஷனர் சென்னையில் இன்று ஆலோசனை
-
ராஜ்குமார் கடத்தல் வழக்கு 9 பேர் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி