கடலாடி யூனியன் அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை

கடலாடி: கடலாடி யூனியன் அலுவலகத்தை நேற்று காலை சாயல்குடி அருகே எஸ். கீரந்தை ஊராட்சியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

பெண்கள் கூறியதாவது:

சாயல்குடி அருகே எஸ்.கீரந்தை ஊராட்சியில் பங்களா மேட்டில் வீடுகள் தோறும் பைப் லைன் இணைத்து இரு ஆண்டுகள் ஆகிறது. வீட்டிற்கு ரூ. 800 வீதம் ஊராட்சி நிர்வாகம் வசூல் செய்தனர். இது நாள் வரை வீடுகளுக்கு குடிநீர் வழங்கவில்லை.

கரூர் கூட்டுக் குடிநீர் இன்னும் செயல் பாட்டிற்கு வரவில்லை. விரைவில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

குடம் தண்ணீர் ரூ.10க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இரண்டு ஆண்டிற்கு மேலாக தண்ணீர் வேண்டும் எனக் கோரி பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொகுதியில் இந்த நிலைமை உள்ளது வேதனை அளிக்கிறது என்றனர்.

முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம் யூனியன் அலுவலர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். வீடுகள் தோறும் காவிரி நீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர். அவர்கள் கூறியதை கேட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

பா.ஜ., முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி, பங்களா மேடு பொருளாளர் சேகர் கோரிக்கை மனுக்களுடன் கலந்து கொண்டனர். கடலாடியில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் குடிநீருக்காக கடலாடி யூனியன் அலுவலகத்திற்கு பெண்கள் காலி குடங்களுடன் கூட்டமாக வரும் நிலை அதிகரித்து வருகிறது.

Advertisement