உள்நாட்டு வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு தொடர்பில்லை: கனடா

4

ஒட்டாவா: தங்கள் நாட்டில் நிகழும் வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று கனடா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி நாளை இந்தியா வர உள்ள நிலையில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.




கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி காலத்தில், காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை இந்தியா முற்றிலும் மறுத்து வந்தது. மேலும், கனடா தனது மண்ணில் காலிஸ்தானி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டியது. இதன் காரணமாக இருநாடுகளாக தூதரக ரீதியிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டது.


இதையடுத்து, கனடாவில் மார்க் கார்னி தலைமையிலான அரசு அமைந்த பிறகு, இந்தியா - கனடா இடையே மீண்டும் சுமூகமாக உறவு நீடித்தது. இந்த சூழலில், கனடா பிரதமர் மார்க் கார்னி நாளை இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கிறார். அப்போது, எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் ஏஐ சார்ந்த வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.


இந்த நிலையில், கனடாவில் நடந்த வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று அங்குள்ள பிரபல செய்தி நிறுவனத்திடம் கனடா அரசின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அத்தகைய சம்பவங்கள் இனி தொடராது என்று நம்புவதாகவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை உட்பட, இருநாடுகளுக்கு இடையே மிகவும் வலுவான தூதரகத் தொடர்புகள் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதன்மூலம், இந்தியாவுடனான சுமூகமான உறவை புதுப்பிக்க கனடா விரும்புவது தெரிய வந்துள்ளது.

Advertisement