48 மணி நேரத்தில் விமான டிக்கெட் ரத்து செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது!

1


புதுடில்லி: விமான டிக்கெட் முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளதாவது:

டிக்கெட் புக் செய்த 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், விமான நிறுவனங்கள் ரத்துக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. உள்நாட்டு விமான டிக்கெட்களுக்கு பயணத் தேதிக்கு குறைந்தது 7 நாட்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்திருக்க வேண்டும்.

சர்வதேச விமான டிக்கெட்களுக்கு பயணத் தேதிக்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்திருக்க வேண்டும்.

மாற்றங்கள் செய்யும் போது ரத்துக் கட்டணம் இல்லை என்றாலும், புதிய டிக்கெட்டின் விலை அதிகமாக இருந்தால் அந்த விலை வித்தியாசத்தை மட்டும் செலுத்த வேண்டியிருக்கும்.டிக்கெட்டில் உள்ள எழுத்துப் பிழைகளைச் சரிசெய்ய 24 மணி நேரத்திற்குள் தெரிவித்தால் கட்டணம் கிடையாது.


ரீபண்ட் செய்ய முடியாத டிக்கெட்டுகளாக இருந்தாலும், பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிகள் அனைத்தையும் விமான நிறுவனம் திரும்ப அளிக்க வேண்டும்.கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியிருந்தால் 7 நாட்களுக்குள்ளும், ஏஜென்ட்கள் மூலம் புக் செய்திருந்தால் 14 நாட்களுக்குள்ளும் பணம் திரும்பக் கிடைக்க வேண்டும்.


இவ்வாறு சிவில் விமானப்போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Advertisement