சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்; சொல்கிறது ஈரான்

19


புதுடில்லி: சபாஹார் துறைமுக மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் இந்தியா நிதி ஒதுக்காதது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு ஈரானின் சபாஹார் துறைமுகத்தை பயன்படுத்துவதற்காக இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தத்துறைமுகத்தில் இருக்கும் இரு முனையங்களில் ஒன்றான ஷாஹித் பெஹெஷ்டி முனையத்தில் கன்டெய்னர்கள் மற்றும் சரக்குகளை கையாள, இந்தியா குறுகிய கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டியிருந்தது.

கடந்த 2024ம் ஆண்டு இந்தத்துறைமுகத்தை இந்தியா, 10 ஆண்டுகளுக்கு கையாள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து, சபாஹார் துறைமுகத்தை பராமரிப்பதற்காக பட்ஜெட்டில் வழக்கமாக நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இருப்பினும், சபாஹார் துறைமுகத்தின் முக்கியத்துவம் கருதி, சில சலுகைகளை அமெரிக்கா வழங்கியிருந்தது. ஆனால், இந்தத்துறைமுகத்தை இந்தியா பயன்படுத்துவதற்கு அளிக்கப்பட்ட விலக்கை அதிபர் டிரம்ப் வாபஸ் பெற்றார். இதனால், சபாஹார் துறைமுகத்தை பயன்படுத்துவதில் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, பட்ஜெட்டில் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், சபாஹார் துறைமுக மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் இந்தியா நிதி ஒதுக்காதது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது; சபாஹார் துறைமுக பராமரிப்பிற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாதது ஈரானுக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கும் பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பிரதமர் மோடி கூறியதைப் போல, ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகளை இந்தியாவுடன் இணைக்க முக்கிய பங்காற்றுவதால், சபாஹார் துறைமுகத்தை 'கோல்டன் கேட்' என்று கூறலாம்.

இது ஒரு மிக முக்கியமான ராஜதந்திர துறைமுகமாகும். இந்தத் துறைமுகம் முழுமையாக மேம்படுத்தப்பட்டால், இந்தியா, ஈரான், மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் மிகச்சிறந்த போக்குவரத்துப் பாதையாக இது அமையும், இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement