டில்லி - ஷிம்லா போலீசாரின் மோதல் முடிவுக்கு வந்தது; இளைஞர் காங்கிரசார் 3 பேர் கைது

1

புதுடில்லி: ஹிமாச்சல பிரதேசத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 3 பேரை கைது செய்து சென்ற டில்லி போலீசாருடன் ஷிம்லா போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்மையில் டில்லியில் நடந்த சர்வதேச ஏஐ மாநாட்டில், இளைஞர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சிலர் சட்டையை கழற்றி அரைநிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த டில்லி போலீசார், ஏற்கனவே சிலரை கைது செய்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சித்தார்த், அர்பாஸ் மற்றும் சவுரப் ஆகிய இளைஞர் காங்கிரஸ் கட்சியின் 3 நிர்வாகிகள், ஹிமாச்சல பிரதேசத்தில் பதுங்கியிருப்பது டில்லி போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, டில்லி போலீசார், ஹிமாச்சல பிரதேசத்திற்கு விரைந்தனர். அங்கு ரோஹ்ரு என்ற பகுதியில் வைத்து மூவரையும் கைது செய்தனர்.

ஆனால், இந்த கைது நடவடிக்கை குறித்து ஹிமாச்சல பிரதேச போலீசாருக்கு எந்த தகவலும் அளிக்கப்படாததால், இந்த விவகாரம் பூதாகரமானது. சிவில் உடையில் வந்து காங்கிரஸ் நிர்வாகிகளை கைது செய்து சென்ற டில்லி போலீசார் மீது கடத்தல் வழக்கை ஷிம்லா போலீசார் பதிவு செய்தனர். இந்த விவகாரம் ஷிம்லா கூடுதல் தலைமை நீதிமன்றம் வரை சென்றது. நீதிபதியும், கைது செய்யப்பட்டவர்களை டில்லி அழைத்து செல்ல அனுமதியளித்தார்.

அதன்படி, இன்று அதிகாலை 4 மணியளவில் ஷிம்லா அருகே உள்ள ஷோகி எல்லை வழியாக சென்று கொண்டிருந்த டில்லி போலீசாரின் வாகனங்களை, ஷிம்லா போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், டில்லி - ஷிம்லா போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, உரிய ஆவணங்களைக் காட்டிய பிறகு, மூவரையும் போலீசார் டில்லி அழைத்துச் சென்றனர்.




Advertisement