நீதித்துறை ஊழல் குறித்த பாடத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை

27

புதுடில்லி: நீதித்துறையில் ஊழல் என்ற சிபிஎஸ்இ 8 ம் வகுப்பு பாடத்திற்கு தடை விதித்துள்ள சுப்ரீம் கோர்ட், இந்த விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி என்சிஇஆர்டி இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சர்ச்சை



சிபிஎஸ்இ எட்டாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல்கள் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் தாமாக முன்வந்து இந்த விவகாரரத்தை விசாரணைக்கு எடுத்தார்.

மத்திய அரசுக்கு நோட்டீஸ்



இந்த வழக்கானது தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்ஷி மற்றும் விபுல் எம் பஞ்சோலி அமர்வு முன்ப விசாரணைக்கு வந்தது. என்சிஇஆர்டி மன்னிப்பு கேட்ட நிலையிலும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், அந்த பாடத்துக்கு தடை விதித்தனர். இந்த உத்தரவை மீறினால் அது நீதித்துறை நிர்வாகத்தில் தலையீடு என கருதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என எச்சரித்ததுடன், இந்த பாடத்தை தயாரித்தவர்களின் பெயர்கள் மற்றும் தகுதி உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.


தலைமை நீதிபதி கூறுகையில், "அவர்கள் தோட்டாக்களை சுட்டதால், நீதித்துறை ரத்தம் சிந்துகிறது. இன்று யாரும் ஏதும் சொல்லலாம். ஆனால், நம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். பாடம் ஆன்லைனில் உள்ளது. இணையதளத்திலும், கடைகளிலும் கிடைக்கிறது. இது திட்டமிட்ட நடவடிக்கை. இந்திய நீதித்துறை எவ்வாறு ஊழல் நிறைந்ததாக சித்தரிக்கப்படுகிறது என்பதை பார்க்கும்போது, என்ன செய்தி அனுப்பப்படும் என்பது தெளிவாகிறது. என்ன கற்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆசிரியர் சமூகத்திற்கு முதலில் சொல்லி கொடுக்க வேண்டும். உண்மையில் சமூகத்தின் ஒரு பிரிவு கூட தொடக்கூடாததாக இருக்கக்கூடாது. இது ஆழமாக வேரூன்றிய நன்கு திட்டமிடப்பட்ட சதி," எனத் தெரிவித்தார்.




மேலும்,


*தேசிய பாடத்திட்டம் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் இந்த பாடத்திற்கு ஒப்புதல் அளித்த கற்றல் கற்பித்தல் குழுவின் உறுப்பினர்கள் தொடர்பான விரிவான பட்டியல் அடங்கிய விவரங்கள்

*பாடத்தை எழுதிய பொறுப்பான பாடநூல் பாடநூல் மேம்பாட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் யெபர்கள் மற்றும் ஆவணங்கள்

* குறிப்பிட்ட பாடம் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள் குறித்த விவரங்களை வழக்கு அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது தாக்கல் செய்ய வேண்டும்.

என்சிஇஆர்டி வெளியிட்டுள்ள இந்த புத்தகத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த புத்தகத்தை அச்சிடவும், விற்பனை செய்யவும் முழுமையான தடை விதிக்கிறோம். புத்தகத்தின் அனைத்து பிரதிகளையும் அரசு உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.


இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு அல்லது மற்ற சட்டங்களின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி மத்திய கல்வி விவகார செயலாளர் மற்றும் என்சிஇஆர்டி இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Advertisement