ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் இரு மடங்கு பெரியது; பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

11

ஜெனீவா: சர்வதேச நாணய நிதியத்திடம் நீங்கள் வாங்கும் கடனை விட, ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் இருமடங்கு பெரியது என்று ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா வெளுத்து வாங்கியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பிப்ரவரி 23ம் தேதி துவங்கிய ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம், மார்ச் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் பல்வேறு கருத்துகளுக்கு இந்திய பிரதிநிதி அனுபமா சிங் பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது; ஜம்மு காஷ்மீரில் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகின்றன. குறிப்பாக, கடந்தாண்டு செனாப் ரயில்வே பாலம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் மிகப்பெரிய நீண்ட ரயில்வே பாலம் என்ற சாதனையை படைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் செனாப் ரயில்வே பாலம் திறக்கப்பட்டது பொய் என்று சொன்னால், பாகிஸ்தான் ஏதோ ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஜம்மு-காஷ்மீரின் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ. 1.13 லட்சம் கோடியாகும். இது பாகிஸ்தான் சமீபத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் வாங்கும் கடனை விட இரண்டு மடங்கு அதிகமாகும். பயங்கரவாதம், பொருளாதார நெருக்கடி மற்றும் பொதுமக்களின் அதிருப்தியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானைப் பற்றி இந்தியா கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை, இவ்வாறு அவர் கூறினார்.

யார் இந்த அனுபமா சிங்?
இந்திய வெளியுறவுத் துறையில் 9 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு 'கேபிஎம்ஜி' நிறுவனத்தில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கணினி அறிவியலில் பி.டெக் முடித்துள்ளார். டில்லி பல்கலையின் மேலாண்மைப் படிப்புகள் பிரிவில் எம்பிஏ பைனான்ஸ் பட்டம் பெற்றுள்ளார்.

Advertisement