பண மூட்டை நீதிபதி விவகாரம்: விசாரணை குழு பதவி காலம் நீட்டிப்பு
புதுடில்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிக்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான காரணங்களை கண்டுபிடிக்க, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்த மூன்று பேர் அடங்கிய குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் டில்லி வீட்டில் கடந்தாண்டு மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் போது, அவர் வீட்டில் இருந்து பாதி எரிந்த நிலையில், கட்டுக்கட்டாக பணம் இருந்த மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. இது, நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.
விசாரணையின் அடிப்படையில், அவரை பதவி விலகும்படியும் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. கடந்தாண்டு ஆகஸ்டில் நியமிக்கப்பட்ட இந்தக் குழு நேற்று மறுசீரமைக்கப்பட்டது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா அடுத்த மாதம் 5ம் தேதி ஓய்வுபெற உள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, லோக்சபா செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறு சீரமைக்கப்பட்ட குழு, அடுத்த மாதம் 6ம் தேதி முதல் செயல்படும் என்றும், இந்தக் குழுவின் காலம் மேலும் மூன்று மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.