தமிழகம் திவால் ஆகும்!

2

என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட மாடல் அரசு சமர்ப்பித்து இருக்கும் இடைக்கால பட்ஜெட்டில், 10.62 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

இதன் வாயிலாக, ஒவ்வொரு குடும்பத்தின் மீதும், 4.66 லட்சம் ரூபாய் கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஆட்சி நடத்தியவர்கள் எவரும், இந்த அளவுக்கு கடன் சுமையை தமிழக மக்கள் மீது சுமத்தியதில்லை.

ஆனாலும், அதுகுறித்து கொஞ்சமும் கவலைப்படாமல், கொக்குக்கு மதி மீன் ஒன்றே என்பதுபோல், எப்படியும் ஆட்சிக்கு வந்துவிடவேண்டும் என்று, இந்த நிலையிலும் மகளிருக்கு, 5,000 ரூபாயை வாரி வழங்கியுள்ளது, தி.மு.க., அரசு.

இலவசத் திட்டங்களை திராவிடக் கட்சிகள் செயல்படுத்தாமல் இருந்திருந்தால், இன்று இந்த அளவுக்கு கடன் சுமை ஏறி இருக்காது.

பெருந்தலைவர் காமராஜர், பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவுத் திட்டத்தை அமல்படுத்த, பெரும் பணக்காரர்களிடம் இருந்து தான் நிதி வசூலித்து செயல்படுத்தினார்.

அவரது ஆட்சிக் காலத்தில், இவ்வளவு சிலைகள், மணி மண்டபங்கள் கட்டப்படவில்லை. அவர் படிக்காவிட்டாலும் எப்படி ஆட்சி நடத்த வேண்டும் எனும் அறிவு இருந்தது. அவரது ஆட்சித்திறனை பார்த்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளே வியந்து போனதுண்டு.

கழகங்கள் ஆட்சிக்கு வந்த பின்தான், தமிழகத்தின் கடன் சுமை படிப்படியாக கூடி, இன்று, 10.62 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதுவும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, கடன் வாங்குவதில் இந்தியாவி லேயே முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த லட்சணத்தில், நாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்கிறார், ஸ்டாலின். ஏன்... தமிழகத்தை திவாலாக்கவா?


நாட்டு நடப்பு தெரியவில்லையே! ஆர்.கந்தசாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மாற்று கட்சியில் இருந்து பா.ஜ.,வில் இணைவோர் முக்கியமற்றவர்களாக மாறி விடுகின்றனர். அசாம் கன பரிஷத் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த சர்பானந்த சோனோவால் போன்றோரை இதற்கு உதாரணமாக கூறலாம்.

'தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.,வில் சேரவுள்ள பூபன் போராவுக்கும் இதே நிலை தான் ஏற்படும். அவரது இந்த முடிவால் காங்.,கிற்கு எந்த பாதிப்பும் இல்லை' என்று கூறியுள்ளார், அக்கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சி துணைத் தலைவர் கவுரவ் கோகோய்.

அசாம் கன பரிஷத் கட்சியில் ஒரு முறை எம்.எல்.ஏ.,வாகவும், மற்றொருமுறை எம்.பி.,யாகவும் இருந்த சர்பானந்த சோனோவால், 2011ல் பா.ஜ.,வில்இணைந்த பின், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், 2014ல் இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

கடந்த 2016 அசாம் சட்ட சபை தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக களமிறக்கி, முதல்வராக்கி அழகு பார்த்தது, பா.ஜ.,

தற்போது, மோடி அமைச்சரவையில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சராக உள்ளார்.

ஆனால், கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேல், கட்சிக்காக உழைத்த பூபன் போராவுக்கு காங்., செய்த நன்மை என்ன?

சோனோவாலின் இன்றைய உயரத்தை அறியாமல், ஏதோ பா.ஜ.,விற்கு வந்ததால் அவர் ஒதுக்கப்பட்டு இருப்பது போலவும், அந்த நிலை பூபன் சோராவுக்கும் வந்து விடும் என்பதும் போல் எச்சரித்துள்ளார், கோகோய்.

சமீபத்தில் நடந்த மும்பை மாநகராட்சி தேர்தலில், கடந்த 30 ஆண்டுகளாக சிவசேனா வசம் இருந்த மும்பை மாநகராட்சியை பா.ஜ., தலைமையிலான மஹா யுதி கூட்டணி கைப்பற்றியது. தற்போது, அம் மாநகராட்சியின் மேயர் யார் தெரியுமா? ரிது தாவ்டே என்ற பெண்மணி!

இவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.,வுக்கு தாவிய வர். அதுமட்டுமா... ரிது தாவ்டேவின் குடும்பமே காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டது!

இது தெரியாமல், காங்., கட்சியிலிருந்து பா.ஜ.,வில் சேர்பவர்கள் முக்கியமற்றவர்களாக மாறி விடுவதாக கூறியுள்ளார், கோகோய்.

மற்றுக்கட்சியில் இருந்து வருவோரை அரவணைத்து, முக்கிய பதவிகளில் அமர்த்துவது பா.ஜ.,வில் மட்டுமல்ல; அனைத்து அரசியல் கட்சிகளிலும் நடப்பது தான்.

இன்று, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் அமைச்சர் பதவி வகிப்போரில் பெரும்பாலானோர், முன்னாள் அ.தி.மு.க.,வினர் தான்!

இங்கே முக்கியத்துவம் என்பது, அவர்களுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கை பொறுத்து தானே தவிர, கட்சிக்காக இல்லை!



மதுரை தொழில் வளர்ச்சி நகரமாகுமா? ஜெ.ஜெரால்டு மனோகரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இடப்பற்றாக்குறை காரணமாக, மதுரை மத்திய சிறைச்சாலையை நகருக்கு வெளியே மேலுாரில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிறைச்சாலை இருந்த இடத்தில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கு, மதுரை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாம்.

மதுரையை தொழில் வளர்ச்சி நகராக மாற்ற, தொழிற்சாலைகளையும், தொழில் நிறுவனங்களையும் கொண்டுவர வேண்டும் என்று இரு திராவிட கட்சி ஆட்சியாளர்களிடமும், மதுரை மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனாலும், காது கேளாதோர் காதில் ஊதிய சங்காய், அக்கோரிக்கை கண்டுகொள்ளப்படாத நிலையில், இப்போது, செம்மொழி பூங்கா அமைக்க தீர்மானம் போட்டுள்ளனர்.

தொழில் வளர்ச்சியில் முன்னேறி, தென் மாநிலங்களின், 'மான்செஸ்டர்' என்று வரலாற்றில் இடம் பிடித்து விட்டது கோவை. அதனால், அங்கு மூலைக்கு மூலை கூட செம்மொழி பூங்கா அமைக்கலாம்.

ஆனால், கோவையின் தொழில் வளர்ச்சியில் கால்வாசி கூட முன்னேறாத மதுரைக்கு, எதற்கு செம்மொழி பூங்கா?

சென்னை, கோவை, திருப்பூருடன் ஒப்பிடும்போது, பல வகையிலும் வளர்ச்சியடையாத பரிதாபமான நகராகவே மதுரை இருக்கிறது.

அதனால், மதுரைக்கு தற்போதைய தேவை பூங்கா அல்ல; வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் கூடங்களே!

மதுரை தொழில் நகரமாக உருவெடுத்தால், மதுரை மக்கள் மட்டுமல்ல; தென்மாவட்ட மக்கள் அனைவரும் பயன்பெறுவர்; அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்!

எனவே, பூங்காவிற்கு பதில், ஐ.டி., நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!



Advertisement