அராம்கோ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்; உலக நாடுகள் கவலை

2

ரியாத்: சவூதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள விவரம் வெளியாகி இருக்கிறது. இது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

ஈரானுக்கு எதிரான போரை, அமெரிக்காவும் அதனுடன் கைகோர்த்துள்ள இஸ்ரேலும் தீவிரப்படுத்தி உள்ளன. கமேனி கொல்லப்பட்டுவிட்ட நிலையில் அவர் இடத்திற்கு யார் வந்தாலும் அவர்களும் கொல்லப்படுவார்கள் என்று அறிவித்துள்ள இஸ்ரேல், மீண்டும் அதிரடியான தாக்குதல்களை தொடங்கி உள்ளது. அமெரிக்காவும் ஈரானுக்கு எதிரான தாக்குதலை வேகப்படுத்தி உள்ளது.

இந் நிலையில் சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான அராம்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள விவரம் வெளியாகி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரானின் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, அந்த எண்ணெய் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது.

தற்போது மீண்டும் அந்த ஆலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான ராய்ட்டர்ஸ் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் எவ்வித சேதாரமும் இல்லை என்று சவூதி அரேபியாவின் ராணுவ அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் கூறி இருக்கிறது.

அராம்கோ உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை என்ற பெயரை பெற்றது. இதன் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டால் உலக கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது சர்வதேச நாடுகளின் கவலையாக உள்ளது.

Advertisement