மாணவர்களுக்கு நல்ல கல்வியை அளிக்க வேண்டும்!

சென்னை, அரும்பாக்கத்தில், 'டியூஷன் சென்டர்' நடத்தும் ஆசிரியை நந்தினி: ஆசிரியையாக வேண்டும் என்ற கனவு, எனக்கு பள்ளி காலத்திலேயே உருவாகி விட்டது. எங்கள் பள்ளியில், கணக்கு பாடம் எடுத்த ஆசிரியர் குல்திப் ஜான், ஒரு பாடத்தை எப்படி எல்லாருக்கும் புரிய வைப்பது என்பதில், பல நுட்பங்களையும், எளிய உதாரணங்களையும் கையாளுவார்.

நாமும் எதிர்காலத்தில் ஆசிரியையானால், இப்படித்தான் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். பி.ஏ., பட்டத்துடன், கல்வியியல் பட்டய படிப்பு முடித்து, தனியார் பள்ளியில் பணிக்கு சேர்ந்தேன். எல்.கே.ஜி.,யில் துவங்கிய என் பணி, அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்தேன்.

ஆனால், திருமணத்துக்கு பின், வாழ்க்கை வேறு விதமான திருப்பத்தை ஏற்படுத்தி விட்டது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருந்தாலும், ஆசைப்பட்ட வேலைக்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் மனதிற்குள் இருந்தது.

நன்றாக படித்து வேலைக்கு சென்று கொண்டிருந்த நான், திடீரென வீட்டில் முடங்கி கிடப்பது போல் தோன்றியது. அப்போது தான், நாம் ஏன் டியூஷன் சென்டர் எனும் தனியார் பயிற்சிக் கூடம் துவங்கக் கூடாது என்ற யோசனை வந்தது.

ஆரம்பத்தில், குடும்பத்தில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பொறுமையாக அவர்களுக்கு எடுத்து கூறினேன். அதன்பின், 'நந்தினி தனி பயிற்சிக் கூடம்' துவங்கினேன். இப்போது, 45 மாணவர்கள் என்னிடம் படித்து வருகின்றனர். டியூஷன் ஆசிரியையாக நான்கு ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து விட்டேன்.

பாட புத்தகத்தில் உள்ளதை மட்டும் சொல்லிக் கொடுப்பதுடன் நான் நின்று விடுவதில்லை; மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் முக்கியம் என்ற கோணத்தில் செயல்படுகிறேன்.

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்துகிறேன். படிப்பில் பின்தங்கியிருக்கும் மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்துகிறேன். பள்ளி பாடங்களுடன், மாணவர்களின் தனித்திறமையை வெளிக் கொண்டு வரவும் உதவி செய்கிறேன். விளையாட்டு, நடனம், ஓவியம் வரைதல் போன்றவற்றையும் கற்றுக் கொடுத்து வருகிறேன்.

வாழ்க்கை என்றால் மேடு, பள்ளங்கள் இருக்கும் என்பதை உணர்ந்திருக்கிறேன். அதனால் தான் பள்ளி வேலையை தொடர முடியாவிட்டாலும், டியூஷன் பணியை மனநிறைவுடன் செய்கிறேன்.

மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் இந்த பணி, என் வாழ்நாள் முழுதும் தொடர வேண்டும் என்பதே ஆசை. இன்னும் அதிகமான குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஓடிக் கொண்டிருக்கிறேன்.

Advertisement