தமிழகத்தில் இருந்து ஆறு பேர் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு

சென்னை: ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த, தி.மு.க.,வைச் சேர்ந்த சிவா, தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ், பா.ம.க., தலைவர் அன்புமணி உள்ளிட்ட ஆறு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிவதால், மார்ச் 16ல் தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

தேர்தல் நடத்தும் அதிகாரியாக தமிழக சட்டசபை கூடுதல் செயலர் சாந்தி நியமிக்கப்பட்டார். ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மொத்தம் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த 6ம் தேதி நடந்த வேட்புமனு பரிசீலனையின்போது, 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுவை வாபஸ் பெற நேற்று கடைசி நாள்.

இதையடுத்து, ஆறு காலியிடங்களுக்கு, ஆறு பேரின் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததால், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி அளித்த பேட்டி:

ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான தேர்தலில், 18 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், தி.மு.க.,வின் சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்; காங்கிரசின் கிறிஸ்டோபர் திலக்; தே.மு.தி.க.,வின் சுதீஷ்; அ.தி.மு.க.,வின் தம்பிதுரை; பா.ம.க.,வின் அன்புமணி ஆகிய ஆறு பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

ஆறு காலியிடங்களின் எண்ணிக்கையும், சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கையும் சமமாக உள்ளன. எனவே, அவர்கள் ஆறு பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

பா.ம.க., வேட்பாளர் அன்புமணியின் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி அளிக்கப்பட்ட கடிதத்தை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைத்தோம்.

அவரிடம் இருந்து உரிய நேரத்திற்குள் பதில் வராததால், அன்புமணி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement