இது உங்கள் இடம்

பழைய கோஷம் எடுபடாது!


வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருச்சி ரயில் நிலையத்தில் தமிழ் வார்த்தையை ஹிந்தியில் எழுதியிருந்தனராம். இதன் வாயிலாக மத்திய பா.ஜ., அரசு ஹிந்தியை மறைமுகமாக திணிக்கப் பார்க்கிறது என்று கண்டனம் தெரிவித் துள்ளார், திராவிட மாடல் முதல்வர்.

தமிழகத்தில் ஹிந்தி மறைமுகமாக நுழையவில்லை; நேரடியாகவே நுழைந்து விட்டதை ஸ்டாலின் இன்னும் அறியவில்லையா?

தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், தங்கள் பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்பி, ஹிந்தி படிக்க வைக்கின்றனர்.

காரணம், தாம் கற்றுக் கொள்ள முடியாத ஹிந்தியை, தன் பிள்ளைகளாவது கற்றுக் கொள்ளட்டும் என்று நினைப்பதால்!

அவ்வகையில், கடந்த மாதம் 23ம் தேதி, 1.25 லட்சம் பேர் பரிட்சயா, பிராத்மிக், மத்யமா, ராஷ்டிரபாஷா போன்ற ஹிந்தி தேர்வுகளை எழுதியுள்ளனர்.

அரசியல் செய்வதற்காக, தி.மு.க., கையிலெடுத்த அதே ஹிந்தியை, தமிழக மக்கள் தங்கள் பிள்ளைகள் வாயிலாக, வீட்டிற்கே அழைத்து வந்து விட்டனர்.

அத்துடன், ஹிந்தி பேசும் வடமாநில தொழிலாளர்கள் சிறிய பெட்டிக் கடை முதல் பெரிய வணிக வளாகம் வரை நிறைந்து விட்டனர். அவர்களை பணியில் அமர்த்தும் உரிமையாளர்களும், அவர்களுடன் உரையாட வசதியாக, ஹிந்தியை அவர்களிடம் இருந்தே கற்றுக் கொண்டு விடுகின்றனர்.

உண்மை இவ்வாறிருக்க, ஹிந்தியை மத்திய அரசு வலுக்கட்டாயமாகத் திணிப்பதாகப் பொய் பிரசாரம் செய்கிறார், ஸ்டாலின்.

ஹிந்தி எதிர்ப்பு என்ற பழைய கோஷம், கூக்குரல் எல்லாம் தமிழகத்தில் இனி எடுபடாது; இதை வைத்து இனிமேலும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்பதை புரிந்து, உளுத்துப் போன ஹிந்தி எதிர்ப்பு கோஷத்தை கைவிட்டு, உருப்படியாக ஏதாவது செய்து தி.மு.க., ஓட்டு வாங்கலாம்!




ஓட்டுகளை பெற போடும் நாடகம்! என்.கந்தையா, புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் அண்டை நாடான வங்கதேசத்தில் பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர்; பலர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. அப்போதெல்லாம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு, தெருவில் இறங்கி போராட தோன்றவில்லை.

ஆனால், இந்தியாவுக்கு தொடர்பே இல்லாத ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு, ஆர்ப்பாட்டம் செய் துள்ளனர்.

பொதுவாக, கம்யூ., கட்சியினருக்கு நாட்டுப்பற்று கிடையாது. இந்தியா - -சீனப்போரின் போது, தங்களை காத்து ரட்சிக்க, செஞ்சட்டை வீரர்கள் சீனாவிலிருந்து வந்து கொண்டிருக்கின்றனர் என்று முழங்கிய வர்கள் தான் இவர்கள்.

போரில் காயமடைந்த நம் நாட்டு வீரர்களுக்கு ரத்ததானம் செய்ய, தன் கட்சியினருக்கு தடை விதித்தவர்கள் இந்த கம்யூனிஸ்ட்கள்.

அதேபோன்று தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

தமிழகத்தில் வசிக்கும் பட்டியலினம் மற்றும் பழங்குடியின மக்களுக்கு உயர் ஜாதி இனத்தவர்களாலோ, அரசியல் கட்சிகளாலோ துன்பமோ, பாதிப்போ, உயிர்சேதமோ எது நிகழ்ந்தாலும் கண்டும் காணாதது போல இருந்து விடுவார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த மகானுபாவர்கள் யார் என்பதை, மூன்று முழு ஆண்டுகள் கடந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதுகுறித்து, அங்கு பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக போராட்டமோ, ஏன் சிறு கண்டனமோ கூட தெரிவிக்கவில்லை, திருமாவளவன்.

ஆனால், இந்தியாவிற்கு சம்பந்தம் இல்லாத ஈரான் உச்ச தலைவர் கமேனி இறந்ததற்கு இங்கே போராடுகிறார்.

எல்லாம் இங்குள்ள இஸ்லாமியர்களின் ஓட்டுகளைப் பெற போடும் நாடகம்!



கைவிட்டது ஏன்?

இல.பிரபு, இளையான்குடி, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் தங்களுக்கு வரும் கடிதங்களை படித்து, அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதுடன், நாளிதழ்களில் அரசு அலுவலகங்கள் குறித்து ஏதேனும் சிறு செய்தி வெளிவந்திருந்தால் கூட, அது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுப்பர்.

ஆனால், தற்போதைய திராவிட மாடல் முதல்வரோ நாளிதழ்களில் வரும் செய்திகளைக் கூட கண்டுகொள்வதாக தெரியவில்லை.

உண்ணாவிரதம், சாலை மறியல், அரசாணை எரிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டங்கள் என, எதிர்ப்புகளை வெளிப்படுத்துவோரை திரும்பிக் கூட பார்ப்பதில்லை.

அவ்வகையில், அரசு பள்ளிக்கல்வி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களின் நியாயமான கோரிக்கையையும் திராவிட மாடல் அரசு கண்டுகொள்வதில்லை.

எதிர்ப்பை வெளிப்படுத்த இயலாத தொகுப்பூதிய ஆசிரியர்களின் நிலையை, அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.

'ஒருவரையும் கைவிட மாட்டோம்' எனக்கூறும் திராவிட மாடல் முதல்வர், தொகுப்பூதிய ஆசிரியர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்து, அவர்களை கைவிட்டது ஏனோ?

lll மண்பானையா, பொன்பானையா? சீத்தலை சாத்தன், திருப்பத்துார், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த இரண்டு மூன்று மாதங்களாக ஒட்ட முடியாத உறவுகள் போல் குதர்க்கமும், ராஜதந்திரமும் கடைப்பிடித்த காங்கிரஸ் - தி.மு.க., இப்போது பழைய கூட்டணி பேரத்தையே உறுதி செய்துள்ளன.

குதர்க்க பேச்சுகளை மறந்து தலைவர்கள் ஒன்றுகூடி விடலாம்; ஆனால், தொண்டர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதில் தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது .

'அன்று அப்படி பேசினரே...' என்று, உள்குத்து வேலைகளை தொடர்ந்தால், வெற்றி என்பது எட்டாக்கனியாகி விடும்.

ஒற்றுமை என்பது உதட்டளவில் இல்லாமல், கைகள் இணைவது தான் பலம்; அதுதான் இணைப்பு பாலம் கூட!

காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர், தமிழக வெற்றிக் கழகம் எனும் வஞ்சிர மீனைப் பிடிக்க வலை வீசினார்; என்ன செய்வது... துாண்டிலில் தி.மு.க., எனும் கெளுத்தி மீன் தான் விழுந்துள்ளது.

இப்போது, 'கிடைத்தது போதும்' என்கிறார். வேறு என்ன சொல்லி விட முடியும்?

உடையும் நிலையில் இருந்த காங்., - தி.மு.க., எனும் பானை, எப்படியோ ஒட்டப்பட்டு விட்டது. ஆனால், ஒட்டப்பட்டுள்ளது மண்பானையா, பொன்பானையா என்பது தேர்தல் முடிவுகளுக்கு பின்பே தெரியும்!

Advertisement