மே.வங்கத்தில் இம்முறை ஏன் 2 கட்டங்களாக ஓட்டுப்பதிவு; தேர்தல் கமிஷன் விளக்கம்

1

புதுடில்லி: கடந்த முறை போல் அதிக கட்டங்களாக இல்லாமல் இரண்டே கட்டங்களில் மேற்கு வங்கத்திற்கு சட்டசபை தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது என்று தலைமை தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.

தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் தேர்தல் வன்முறை சம்பவங்களுடன் இரண்டற கலந்தது. கள்ள ஓட்டு, ஓட்டு போடுபவர்களுக்கு அச்சுறுத்தல், ஓட்டுச்சாவடி அபகரிப்பு, சில தருணங்களில் ஓட்டுச்சாவடி சூறை போன்ற காட்சிகள் அரங்கேறியது உண்டு. இதன் காரணமாக பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்படுவது வழக்கமானதாக இருந்தது.

குறிப்பாக, மேற்கு வங்கம், உ.பி. போன்ற மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகம் என்பதோடு மக்கள் தொகையும் அதிகம் என்பதால் பல கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. கடந்த முறை மேற்கு வங்கத்தில்(2021) 8 கட்டங்களாக ஓட்டுப்பதிவு அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது.

ஆனால் இம்முறை அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக 8 என்பது மிகுதியாக குறைக்கப்பட்டு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் கமிஷனின் இந் நடவடிக்கை பல கேள்விகளை எழுப்பவே, அதற்கான விளக்கத்தையும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறி இருப்பதாவது;

தேர்தல் கமிஷன் விரிவான ஆலோசனை நடத்தியது. அனைவருக்கும் வசதியாக இருக்கும் அளவுக்கு ஓட்டுப்பதிவுக்கான காலக்கட்டங்களை, அதன் எண்ணிக்கையை குறைப்பது அவசியம் என்பது கண்டறியப்பட்டது.

இவ்வாறு ஞானேஷ்குமார் கூறினார்.

மே. வங்கத்தில் 2006ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை முறையே, 5,6,7 மற்றும் 8 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. தற்போது முதல் முறையாக 2 கட்டங்களாக ஓட்டுப்பதிவு அறிவிக்கப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.

Advertisement