போலீஸ் டைரி: பீஹார் சிறுவன் தற்கொலை
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் கோபிகுமார், 17. இவர், காங்கயம், ஆலம்பாடியில் தங்கி, அரிசி மில்லில் கடந்த ஒரு மாதமாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, காதலியிடம் போனில் பேசி கொண்டிருந்தார். ஆனால், நேற்று காலை குடோனில் துாக்கில் இறந்து கிடந்தார். காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சிறுவன் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து விசாரிக்கின்றனர்.
போன் திருட்டு: 5 மாதம் சிறை
திருப்பூர், பூலுவபட்டி சந்திப்பு அருகே விஸ்வராஜ், 30 என்பவரின் மொபைல் போனை மனோகரன், 63 என்பவர் திருடினார். போலீசார் கைது செய்து, போனை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கு விசாரணை, திருப்பூர் ஜே.எம்-3 கோர்ட்டில் நடந்தது. குற்றவாளிக்கு, ஐந்து மாதம் சிறை தண்டனை வழங்கி மாஜிஸ்திரேட் தனலட்சுமி தீர்ப்பளித்தார்.
மது விற்ற வாலிபர் கைது
அவிநாசி, நடுவச்சேரி கிராமத்தில், மது பாட்டில்களை 'டாஸ்மாக்' கடையில், வாங்கி வந்து கூடுதல் விலைக்கு, தோட்டத்து பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு விற்பனை செய்து வந்த பட்டறை பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார், 30 என்பவரை அவிநாசி போலீசார் கைது செய்தனர்.
மேற்கூரை விழுந்து 5 பேர் காயம்
திருப்பூர், மங்கலம் ரோடு, கே.வி.ஆர். நகர் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுக்கு அருகிலுள்ள பனியன் நிறவன மேற்கூரை பறந்து விழுந்தது. இதனால், நாகராஜ், 67, பாண்டி புஷ்பா, 62, கலா, 52, தாரணி, 15, பிரியா, 16 என, ஐந்து பேர் லேசான காயத்துடன் தப்பினர். சென்ட்ரல் போலீசார் விசாரிக்கின்றனர்.