பத்திரப்பதிவுக்கு லஞ்சம்; சார் பதிவாளர்கள் மீது புகார்

2

சென்னை : அசல் ஆவணத்தை சரி பார்க்காமல் பத்திரப்பதிவு செய்ய, சார் பதிவாளர்கள் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

பத்திரப்பதிவுக்கு முன், சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள், அதாவது தாய்ப்பத்திரத்தை சரிபார்ப்பது அவசியம். பெரும்பாலான இடங்களில், கடைசியாக யார் பெயருக்கு சொத்து கைமாறியது என பார்த்து, அதற்கு ஏற்ப பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

இதுபோன்ற பரிமாற்றத்தின்போது, அந்த சொத்தின் அசல் தாய்ப்பத்திரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்பது கட்டாயம். பல சமயங்களில், அசல் தாய்ப்பத்திரத்தின் பிரதி இல்லை என்று, மக்கள் கூறுகின்றனர். இதில் அசல் தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், அது காணவில்லை என்று போலீசில் புகார் அளித்து, சான்றிதழ் பெற்று வர வேண்டும்.

இதற்கு அலைச்சல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறுக்கு வழியாக, 50,000 ரூபாயை லஞ்சமாக வாங்கிக்கொண்டு சார் பதிவாளர்கள் பத்திரத்தை பதிவு செய்து கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. காணாமல் போன பத்திரங்கள் தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் அளித்ததை ஆதாரமாக வைத்து, சொத்து பத்திரங்களை பதிவு செய்து கொடுப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சொத்தின் அசல் தாய்ப்பத்திரம் இல்லாத நிலையில், எப்படி பத்திரப்பதிவு மேற்கொள்வது என்பதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ள;. ஆனால், இதற்கு மாறாக பெரும்பாலான சார் பதிவாளர்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. பொது மக்கள் புகார் தெரிவித்தால், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement