ஜாபர் சாதிக் வீட்டில் 2வது நாளாக சோதனை

சென்னை:ஹவாலா பணம் பதுக்கல் புகார் தொடர்பாக, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டில், இரண்டாவது நாளாக சோதனை நடந்தது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீடு, சென்னை பட்டினப் பாக்கத்தில் உள்ளது.

இவரது வீட்டில், வாக்காளர்களுக்கு கொடுக்க, கோடிக்கணக்கில் ஹவாலா பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, டில்லி வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது .

இதையடுத்து, சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீடு மற்றும் அவரது தனியார் தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில், அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இச்சோதனையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் என்.சி.பி., எனும் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் இணைந்துள்ளனர்.

ஜாபர் சாதிக் தொடர்புடைய ஒன்பது இடங்களில் சோதனையை நிறைவு செய்துள்ளனர். ஜாபர் சாதிக் வீட்டில் மட்டும், நேற்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, ஜாபர் சாதிக், தன் பினாமிகள் பெயரில், 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்குள் துவங்கி இருப்பதும், அவற்றில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Advertisement