தேவைக்கு யூரியா பயன்படுத்துங்க :விவசாயிகளுக்கு ஆலோசனை

மதுரை: கோடை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், பயிர்களின் தேவைக்கு அதிகமாக யூரியாவை பயன்படுத்தக்கூடாது என வேளாண் இணை இயக்குநர் முருகேசன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

கோடையில் மதுரை கிழக்கு, மேற்கு, செல்லம்பட்டி, அலங்காநல்லுார், வாடிப்பட்டி பகுதிகளில் 10ஆயிரம் எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

நெற்பயிர்களில் அதிகளவு யூரியா உரத்தை இடும் போது பயிர்களில் தழைச்சத்து (நைட்ரஜன் அளவு) அதிகரித்து இலைகள் அதிக பசுமையுடன் செழிப்பாக இருக்கும். இதுவே பூச்சி, நோய் தாக்குதல் அதிகரிக்கும் வாய்ப்பை உருவாக்கும்.

மண்பரிசோதனை பரிந்துரைப்படி ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 45 கிலோ எடையுள்ள 2 மூடை அளவே பயன்படுத்த வேண்டும். ஒரு மூடை யூரியாவை அடியுரமாக இட வேண்டும். நாற்று நட்ட 25 முதல் 30 வது நாளில் 15 கிலோ, அடுத்தடுத்து 10 நாட்களில் தலா 15 கிலோ என பூப்பதற்கு முன்பாக 3 முறை யூரியாவை மேல் உரமாக பிரித்து இட வேண்டும். பயிர்களின் தேவைக்கு மிஞ்சிய யூரியா மண்ணில் படிந்து வீணாகும்.

அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் கடைகளில் 3450 டன் யூரியா இருப்பில் உள்ளது. மேலும் 950 டன் டி.ஏ.பி., 575 டன் பொட்டாஷ், 3998 டன் காம்ப்ளக்ஸ் உரம் இருப்பில் உள்ளது. விவசாயிகள் ஆதார் அடையாள அட்டையுடன் சென்று உரம் வாங்க வேண்டும். சங்கங்கள், கடைக்காரர்கள் ஆதார் எண் இன்றி உரம் வழங்கக்கூடாது என்றார்.

Advertisement