30 நாட்கள் தான் தவெக ஆட்சி என்று எந்த தைரியத்தில் ஸ்டாலின் கூறுகிறார்; கேட்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்

14


சென்னை: 30 நாட்கள் தான் தவெக ஆட்சி இருக்கும் என்று எந்த தைரியத்தில் ஸ்டாலின் கூறுகிறார் என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது பேட்டி: திமுகவினர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும் எந்த பிரச்சனையும் இல்லை. தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்த சிலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்து ரூ.35 கோடி, ரூ.50 கோடி என தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேரம் பேசியவர்கள் ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதனால் வேற வழி இன்றி கவர்னரிடம் திமுகவினர் புகார் அளித்து கதறிக் கொண்டிருக்கின்றனர்.

5 வருடம் அவர்கள் ஆட்சி நடத்திய லட்சணத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்கான விளைவு தான் இந்த தேர்தலில் மக்கள் ஓட்டு அளித்துள்ளனர். மக்களிடம் நீங்கள் நல்லபடியாக நடந்து கொண்டால் இந்த பிரச்னை உங்களுக்கு ஏன் வரப்போகிறது. ஸ்டாலின் இந்த அரசு 30 நாட்கள் தான் இருக்கும் என்று சொல்கிறார். 30 நாட்களில் ஸ்டாலின் மிகப்பெரிய தலைவர் ஆகிவிட்டாரா? தேர்தல் முடிந்து 40 நாட்கள் ஆகிவிட்டது. இந்த 40 நாட்களில் ஸ்டாலின் மிகப்பெரிய தலைவராகி விட்டாரா அல்லது மிகப் பெரிய ஆளுமை ஆகிவிட்டாரா?

ரூ.40 கோடி, ரூ.50 கோடி வைத்திருந்தால் நீங்கள் யாரை வேண்டுமானாலும் வாங்கி விடலாமா? 30 நாட்கள் தான் இந்த ஆட்சி இருக்கும் என்று என்ன தைரியத்தில் ஸ்டாலின் சொன்னார். நாங்கள் 120 எம்எல்ஏக்களுடன் வலுவான ஆதரவுடன் ஆட்சியில் இருக்கிறோம். என்ன தைரியத்தில் 30 நாட்களுக்கு மேல் இந்த ஆட்சி இருக்காது என்று ஸ்டாலின் சொல்லி வருகிறார். இவர்கள் செய்து வரும் வேலையை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசுக்கு எல்லா வழிகளிலும் தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். ஆனாலும் நாங்கள் மக்கள் பணியை தொடர்ந்து செய்வோம்.

மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். நாங்கள் எதற்கு தயங்கவில்லை; யாருக்கும் பயப்படவில்லை. மக்களை தவிர வேறு யாருக்கும் இந்த அரசு பயப்படாது. இவர்கள் இரண்டு பேரும் அந்த கட்சிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால் அந்தக் கட்சிக்கு நல்லது. இபிஎஸ் அந்த கட்சியை விட்டு விலகினால் ஓரளவு அந்த கட்சி காப்பாற்றப்படும்.

கட்சிக்கு கடைசியாக ஏதும் நல்லது செய்ய விரும்பினால், கட்சியை காப்பாற்ற நினைத்தால், ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் குடும்பம் அந்த கட்சியை விட்டு விலக வேண்டும். இபிஎஸ் மற்றும் இபிஎஸ் குடும்பம் அந்த கட்சியை விட்டு விலகினால் நல்லது நடக்கும். திமுகவினர் என்ன எழுதிக் கொடுக்கிறார்களோ அதை இபிஎஸ் பேசிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement