அருவங்காட்டில் குட்டிகளுடன் வந்த காட்டெருமைகளால் அச்சம்

அருவங்காடு: அருவங்காடு சாலையில், கூட்டமாக குட்டிகளுடன் உலா வரும் காட்டெருமைகள் தாக்கும் அபாயத்தில் மக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.

குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உணவு தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளிவரும் காட்டெருமைகள் குடியிருப்புகள், சாலைகள், தேயிலை தோட்டங்களில் உலா வருகிறது.

இந்நிலையில், அருவங்காடு பகுதியில், 10க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் அவ்வப்போது உலா வருகின்றன. அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை வழியாக வந்த காட்டெருமை கூட்டத்தால் பள்ளி மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர், வியாபாரிகள் என பலரும் அச்சத்துடன் நடந்து சென்றனர்.

சாலைகளை கடக்கும் போது ஹாரன் சப்தத்தில் ஓட்டம் பிடிக்கும் காட்டெருமைகள் மக்களை தாக்கும் அபாயமும் உள்ளது. எனவே, வனத்துறையினர் இப்பகுதிகளை கண்காணித்து, காட்டெருமைகளை வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement