கச்சா எண்ணெய் கொடுத்த ரஷ்யாவுக்கு 60,000 டன் பெட்ரோல் அனுப்பியது இந்தியா

14

மாஸ்கோ: தன் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க, ரஷ்யா முதன்முறையாக இந்தியாவில் இருந்து கடல்வழியாக பெட்ரோல் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நான்கு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் சமீபத்தில் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பலத்த சேதமடைந்து உள்ளன.

இதனால், உலகிற்கே பெட்ரோல் தயாரிப்புக்கான கச்சா எண்ணெயை வழங்கி வந்த ரஷ்யாவில் தற்போது கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அங்கு பெட்ரோல் விலை அதிகரிப்பு, பெட்ரோல் பங்க்குகளில் நீண்ட வரிசை, ரேஷன் அடிப்படையில் பெட்ரோல் வினியோகம் என, ரஷ்ய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாகவே, ரஷ்யாவில் கோடைகாலத்தில் பெட்ரோல் தேவை மிக அதிகமாக இருக்கும். அங்கு நாளொன்றுக்கு குறைந்தது, 1.10 லட்சம் டன் பெட்ரோல் தேவைப்படும்.

எனவே இந்த திடீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, எரிபொருளை இறக்குமதி செய்வது குறித்து பிற நாடுகளுடன் ரஷ்யா பேச்சு நடத்தி வருவதாக, அதிபரின் கிரெம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது.

அதன்படி, நம் நாட்டில் இருந்து கடல்வழியாக பெட்ரோல் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. தற்போது நம் நாட்டில் இருந்து 60,000 டன் பெட்ரோல் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

தலா 30,000 டன் திறன் கொண்ட இரண்டு பெரிய சரக்குக் கப்பல்கள் ஏற்கனவே நம் நாட்டில் இருந்து புறப்பட்டுவிட்டதாக தெரிகிறது. எனினும், எந்த சுத்திகரிப்பு நிறுவனம் இந்த பெட்ரோலை வழங்குகிறது என்ற விபரங்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவுக்கு நம் நாடு பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் அதே வேளையில், ரஷ்ய கச்சா எண்ணெய் வருகை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஜூன் மாதத்தில் நம் நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதியில் ரஷ்ய எண்ணெய் பங்கு, 50 சதவீதமாக இருந்தது.

Advertisement