பெண் சக்தியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்: பிரதமர் மோடி

5


புதுடில்லி: குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலையில் பணிபுரியும் பெண்களுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அவர் பெண் சக்தியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் - சனந்த் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிஜி செமி நிறுவனத்தின் செமிகண்டக்டர் ஆலையை திறந்து வைத்த பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய செமிகண்டக்டர் திட்டத்தின் கீழ், மத்திய அரசால் முதற்கட்டமாக ஒப்புதல் அளிக்கப்பட்ட 4 முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த அதிநவீன ஆலை ரூ.7,500 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆலையில் பணிபுரியும் பெண்களுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சனந்தில் உள்ள செமிகண்டக்டர் ஆலையின் திறப்பு விழாவின் மிகச் சிறப்பான தருணங்களில் ஒன்று, அங்கு பணிபுரியுபவர்களுடன் உரையாடக் கிடைத்த வாய்ப்பாகும். அங்கு பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள்.

அவர்கள் இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்; அவர்களில் பலர் பழங்குடியினப் பின்னணியைக் கொண்டவர்கள். ஆனால், அவர்களின் குறிப்பிடத்தக்க மன உறுதி, அவர்கள் செமிகண்டக்டர் பற்றி கற்று அறிவதை உறுதி செய்தது. அவர்கள் பயிற்சிக்குச் சென்று, இன்று இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் மேலும் வலு சேர்க்கிறார்கள். பெண் சக்தியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement