குதிரை பேரத்தை உருவாக்கியதே திமுக தான்; எங்களுக்கு அந்த அவசியமே இல்லை என்கிறார் செங்கோட்டையன்

7


ஈரோடு: குதிரை பேரத்தை உருவாக்கியதே திமுக தான்; எங்களுக்கு அந்த அவசியமே இல்லை என தவெக மீது குதிரை பேர குற்றச்சாட்டை வைத்து அடுத்தடுத்து கவர்னர் சந்தித்த பாஜக, திமுக, அதிமுகவுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்தார்.

ஈரோட்டில் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: என்னை பொறுத்தவரை இந்த குதிரை பேரத்தை உருவாக்கியதே திமுகதான். ஜெயலலிதா இருந்த காலத்தில், நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிற போது, மதிமுகவை சேர்ந்த ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து திமுகவில் இணைத்தனர். பிறகு மீண்டும் திமுகவில் போட்டியிடுவதற்கு வாய்ப்பை அளித்தனர்.

அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்தவர். அவரையும் அதை தான் செய்தனர். குதிரை பேரத்தை முதல் முதலில் உருவாக்கிய நிலை திமுகவுக்கு தான் இருக்கிறது. எங்களுக்கு அந்த நிலை இல்லை. குதிரை பேரம் என்பது எனக்கு புரியவில்லை. எல்லோரும் குதிரை பேரம் என்கிறார்கள். ஆகவே அதற்கு வேறு பொருள் தமிழகத்திற்கு தேடி கொண்டு இருக்கிறோம்.

எப்படி அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்கு தேடிக்கொண்டு இருக்கிறோம், அது கிடைத்தால் அதற்கான பதில் சொல்லப்படும். குதிரை பேரம் பேச வேண்டிய நிலை இல்லை. நாங்கள் இன்றைக்கு வலிமையாக ஆட்சி அமைத்து இருக்கிறோம், எங்கள் கூட்டணி வலிமையான ஆதரவை தந்து இருக்கிறது. இன்றைக்கு அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கும் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம் என்று சொன்னார்கள். குதிரை பேரத்திற்கே வேலை இல்லை. வலிமையான, நேர்மையான ஆட்சி, தமிழ் மக்கள் அனைவரும் விரும்பிய ஆட்சி நடக்கிறது. 96 பேர் கொண்டு மைனாரிட்டி ஆட்சி நடத்தியவர்களுக்கு தான் குதிரை பேரம் தேவை. எங்களுக்கு தேவை இல்லை. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement