மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி

போச்சம்பள்ளி:போச்சம்பள்ளியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தாசில்தார் மோகன் தலைமை வகித்து பேசியதாவது:

நாட்டின், 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்கவுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சுய கணக்கெடுப்பில் தங்கள் விபரங்களை, https://se.census.gov.in இணையத்தில் வரும், 31ம் தேதி வரை மக்கள் பதிவு செய்யலாம். அதில், உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து, அதில் கேட்கப்படும், 33 கேள்விகளுக்கு பதிலளித்து பதிவு செய்தால், உங்களுக்கு எஸ்.இ., - ஐ.டி., வழங்கப்படும். வரும் ஆக.,1 முதல், ஆக., 30 வரை உங்கள் வீடுகளுக்கு கணக்கெடுப்புக்கு வரும் அலுவலர்களிடம் அந்த ஐ.டி.,யை குறிப்பிட்டாலே போதும். இல்லாவிட்டால், அலுவலர்கள் கேட்கும் ஆவணங்களை காட்டி, மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு ஒத்துழைக்க வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பில் மக்களின் பங்கே மிக அவசியம்.இவ்வாறு, அவர் பேசினார்.
போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய பேரணி, பஸ் ஸ்டாண்ட் வழியாக தாசில்தார் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில், 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பேண்டு வாத்தியங்கள் வாசித்தபடியும், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடியும் கலந்து கொண்டனர்.

Advertisement