தம்பதி மாயமானது குறித்து போலீசார் விசாரணை

வில்லியனுார்: வில்லியனுார் அருகே பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற புதுமண தம்பதி காணமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த வி.மணவெளி வெள்ளிவேல் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ஜெயராமன் (எ) பாரதிராஜா, 28. இவர் தந்தைக்கு உதவியாக டெரக்கோட்டா பொம்மைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த பிப்., மாதம் பாரதிராஜாவிற்கு திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த சூர்யா, 20, என்ற பெண்ணை குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு பாராதிராஜா சரியாக வேலை செய்யமால் மாமியார் வீட்டுக்கு பயணம் என, மனைவியுடன் அடிக்கடி வெளியே சுற்றி வந்துள்ளார்.

கடன் பெற்று திருமணம் செய்து வைத்துள்ளோம். இப்படி சுற்றிவந்தால் கடனை எப்படி அடைப்பது என, பாரதிராஜாவை அவரது தாய், கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த பாரதிராஜா தனது மனைவி சூர்யாவுடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. மாமியார் வீட்டிற்கு சென்று இருப்பார் என, பெற்றோர் நினைத்து தேடாமல் இருந்துவிட்டனர்.

நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் உள்ள மாமியார் வீட்டிற்கு தம்பதியர் செல்லவில்லை என கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த குமார், வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷனில் மகன் மற்றும் மருமகள் காணாமல் போனது குறித்து புகார் தெரிவித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, காணாமல் போன புதுமண தம்பதியர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement