‘நீட்’ வினாத்தாள் கசிவு வழக்கு சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடில்லி, ஜூலை 29–



நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘நீட்’ வினாத்தாள் கசிவு வழக்கில் சி.பி.ஐ., முதற்கட்ட குற்றப்பத்திரிகையை டில்லியில் உள்ள சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. அதில், கைதான 13 பேருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.



இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு நாடு முழுதும் கடந்த மே 3 அன்று நடந்தது. அப்போது தேர்வு வினாத்தாள் கசிந்த தகவல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து மே 3 அன்று நடந்த நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 21 நடத்தப்பட்டு, ஜூலை 16ல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், சி.பி.ஐ., விசாரணை மேற்கொண்டதில் வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட பேராசிரியர்கள் சிலர் மூலம் வினாத்தாள் கசியவிடப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் கைமாறியது தெரியவந்தது. இதையடுத்து தனியார் பயிற்சி மைய உரிமையாளர், பேராசிரியர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறைக்காவலில் உள்ள 13 பேருக்கு எதிராக டில்லியில் உள்ள சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் சி.பி.ஐ., முதற்கட்ட குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்தது. இவ்வழக்கில் 360 சாட்சியங்கள், 422 ஆவணங்கள் மற்றும் 43 முக்கிய பொருட்களும், சி.பி.ஐ., தரப்பில் சாட்சியங்களாக சமர்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement