கோமுகி அணை பூங்கா புனரமைக்க ரூ.30.60 கோடி:'தினமலர்' செய்தியால் வேகமெடுத்த பணி
கச்சிராயபாளையம்: கோமுகி அணையில் 30.60 கோடி ரூபாய் மதிப்பில் பூங்கா புனரமைப்பு பணி துவங்கி கிடப்பில் போட்ட நிலையில், 'தினமலர்' நாளிதழ் செய்தியால் மீண்டும் பணிகள் துவங்கி வேகமெடுத்துள்ளது. கல்வராயன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கோமுகி அணை. இதன் கட்டுமானப் பணிகள் 1963ம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் துவங்கி 1965ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி அன்றைய முதல்வர் பக்தவச்சலம் அணையை திறந்து வைத்தார். 900 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணை 46 அடி உயரம் கொண்டது. இதன் மூலம் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 11 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கோமுகி அணை அமைக்கப்பட்டபோது சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், குதிரையில் அமர்ந்து நேரு சவாரி செய்யும் சிலை, குறள் எழுதும் திருவள்ளுவர் சிலை, சிவபெருமான், ஏசு, மரியாள், தியானம் செய்யும் புத்தர், சிங்கம், புலி, சிறுத்தை, காளைமாடு உட்பட பல்வேறு சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. பல இடங்களில் காட்சி மேடைகளும் இருந்தன. மேலும் அங்கு கண்கவர் பூங்கா ஒன்றும் அதில் ராக்கெட் வடிவமைப்பும் அமைக்கப்பட்டிருந்தது.
கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் பொட்டியம், கல்படை, பரங்கிநத்தம், ஆகிய ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை நீர் முழுதும் கோமுகி அணையில் வந்து தேங்குகிறது. கல்வராயன்மலையில் உள்ள பெரியார், மேகம், கவியம், சிறுகலுார், எட்டியாறு உட்பட பல்வேறு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. மேலும் கரியாலுாரில் படகுதுறை, சிறுவர் பூங்கா, மூங்கில் குடில்கள் ஆகியவைகளும் உள்ளன.
கல்வராயன்மலையில் ஆகஸ்ட் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை நீர் வீழ்ச்சிகளில் நீர் வரத்து இருக்கும். இதனால் கல்வராயன் மலைக்கு புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் கோமுகி அணையை முதலில் பார்வையிட்ட பின் கல்வராயன்மலைக்கு செல்கின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பராமரிப்பின்றி கோமுகி அணையில் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் முழுதும் சேதமடைந்தன.
மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த பூங்காவும் பரமரிப்பில்லாமல் போனது. இதனால் கோமுகி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேமடைந்த சிலைகள் புனரமைக்கப்பட்டதுடன் கோமுகி அணை பூங்காவும் சீரமைக்கப்பட்டது.
பூங்காவில் புதிதாக குரோட்டான்ஸ் செடிகள் மற்றும் பல்வேறு அழகு தாவரங்கள் நடவு செய்யப்பட்டது. மேலும் ஓய்வு மண்டபம் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால், பூங்கா பராமரிப்பின்றி சேதமடைந்ததுடன், புதர்கள் மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. பூங்காவில் அமைக்கப்பட்ட கழிவறைகளை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து அதில் பண்ணை அமைத்து பன்றிகளை வளர்த்து வந்தனர்.
இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்ட பின்னரே பொதுபணித்துறை அதிகாரிகள் பன்றி பண்ணையை அகற்றினர்.
இந்நிலையில் கோமுகி அணை பூங்காவை 30 கோடியே 60 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புனரமைக்க திட்டமிடப்படப்பட்டது. இதில் 828 மீட்டர் சுற்றளவில் மதில் சுவர் அமைத்தல், ஆண்கள், பெண்களுக்கு தனி தனி கழிவறை வசதிகள், நடை பாதைகள் அமைத்தல்.
காட்சிக் கூடம், சிறப்பு வடிவமைப்பு கொண்ட இருக்கைகள், அழகு தாவரங்கள், பார்வை கோபுரங்கள், குடிநீர் வசதி, டிக்கெட் கவுண்டர் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டது. பூங்கா அமைப்பதற்காக கடந்த மார்ச் மாதம் பூமி பூஜை போடப்பட்டது.
பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கி அங்கிருந்த முட்புதர்கள் மட்டுமே அகற்றப்பட்டது. தொடர்ந்து பணிகள் எதுவும் நடைபெறவில்லை. கடந்த மே மாதம் பூங்கா சீரமைப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் விரைவில் துவங்க வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் மீண்டும் செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து கோமுகி அணையில் பூங்கா புனரமைப்பு பணிகள் துவங்கி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயனிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.