ஏமன் கடற்கரை அருகே சரக்கு கப்பல் மீது தாக்குதல்; இந்திய மாலுமிகள் 13 பேர் பத்திரமாக மீட்பு
நமது நிருபர்
ஏமன் கடற்கரை அருகே சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் இருந்த இந்திய மாலுமிகள் 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ஏமன் கடற்கரைக்கு அருகே செங்கடலில், இந்திய சரக்கு கப்பலான எம்.எஸ்.வி. பைஸ் நூரே ஓலியா மீதான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கப்பலில் இருந்த 13 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ரியாத்தில் உள்ள நமது தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், கப்பல் ஊழியர்களின் பாதுகாப்புக்காக ஏமன் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
அவர்களின் ஆதரவிற்காக ஏமன் அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இப்பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கின்றன. இப்பகுதியில் வர்த்தகக் கப்பல்களைக் குறிவைப்பது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
மேலும் சர்வதேச சட்டத்திற்கு இணங்க, இப்பகுதியில் உள்ள சர்வதேச போக்குவரத்து வழித்தடங்களில் தடையற்ற கப்பல் போக்குவரத்தும், வர்த்தகமும் விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனக்கு இந்த வெளங்காத டிரம்ப் மேல தான் டவுட் ...அதென்ன எப்போப்பாரு இந்தியக்காரன் போற கப்பலா பாத்து பாத்து அடிக்குறானுக ...
மோடி சார் ஆக்ட் now