திறப்பு விழா கண்ட நவீன பொது கழிவறை மூடியே கிடக்கிறது

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் , சந்தப்பேட்டை தாலுகா அலுவலகம் அருகே கட்டப்பட்ட நவீன பொதுக் கழிப்பறை பயன்பாடற்று மூடி கிடக்கிறது.

திருக்கோவிலுார் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில திட்டங்களுக்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அப்படித்தான் திருக்கோவிலுார் கட்டை கோபுரம் அருகே வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட இருந்த நவீன பொதுக் கழிப்பறைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக சந்தப்பேட்டை, தாலுகா அலுவலகம் முன்பாக 36 லட்சம் மதிப்பில் நவீன பொது கழிப்பறை கட்டி, 2024 ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி திறக்கப்பட்டது. கழிவறை திறக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டது.

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கழிப்பறை மூடியே கிடக்கிறது. இதனால் தாலுகா அலுவலகம் நீதிமன்றம் உள்ளிட்ட அப்பகுதியில் இருக்கும் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் இயற்கை உபாதை கழிக்க வசதி இன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதன் மூலம் அரசு பணம் வீணடிக்கப் பட்டிருப்பதுடன், பொதுமக்களின் நலனும் புறக்கணிக்கப் பட்டிருப்பதாகவே பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, நவீன பொதுக் கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement