மின்சாரம் தாக்கி பேரூராட்சி ஊழியர் பலி 

காட்டுமன்னார்கோவில்: மின் கம்பத்தில் ஏறி மின்விளக்கை சரி செய்த போது மின்சாரம் தாக்கி பேரூராட்சி ஊழியர் இறந்தார். 

காட்டுமன்னார்கோவில் உடையார்குடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் சக்திவேல் 56; இவர் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் குடிநீர் திட்ட உதவியாளராக வேலை செய்தார்.

நேற்று அப்பகுதி குடிநீர் தொட்டி மின் மோட்டார் மின்சாரம் துண்டிப்பால் வேலை செய்யவில்லை. அதனை சரி செய்ய மின் கம்பத்தில் உள்ள மின்சாரத்தை துண்டிக்க சக்திவேல் மின் கம்பத்தில் ஏறினார்.

அப்போது ஏதிர்பாராத விதமாக அவர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் எற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தவரை உடன், 108 ஆம்புலன்ஸ் மூலம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அவரது மகன் கவிவர்மன் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Advertisement