ஆசிரியர் கல்வியியல் படிப்புகளுக்கு புதுச்சேரி பல்கலையில் இன்று நேரடி சேர்க்கை 

  புதுச்சேரி: ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான நேரடிச் சேர்க்கை  குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 இது குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

 புதுச்சேரி பல்கலைக்கழக  பி.ஏ. பி.எட். மற்றும் பி.எஸ்சி. பி.எட் ஆகிய ஒருங்கிணைந்த படிப்புகளுக்கான இந்த நேரடி சேர்க்கை முகாம், இன்று 10 ம்தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்வியியல் புலத்தில் நடைபெறும். இந்த நேரடிச் சேர்க்கையானது தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான என்.சி.இ.டி,. மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும். 

எனவே, என்.சி.இ.டி., தேர்வில் கட்டாயம் பங்கேற்று, நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்கும் மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இத்தேர்வினை எழுதாத விண்ணப்பதாரர்கள் எக்காரணம் கொண்டும் இந்தச் சேர்க்கைக்குப் பரிசீலிக்கப்பட மாட்டார்கள். மேலும், மாணவர்களின் மதிப்பெண் தகுதி, முன்னுரிமை மற்றும் வகுப்புகளில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே சேர்க்கை உறுதி செய்யப்படும்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பும் தகுதியான மாணவர்கள், சேர்க்கை நடைபெறும் நாளன்று தங்களின் அனைத்து அசல் சான்றிதழ்களுடனும் கட்டாயம் நேரில் செல்ல வேண்டும். இணையவழியாகவோ  அல்லது பிரதிநிதிகள் மூலமாகவோ பதிவு செய்வது ஏற்றுக்கொள்ளப்படாது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement