ஏவுகணைகள், வெடிகுண்டு தயாரிக்கும் திட்டம்; உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு டிஆர்டிஓ அழைப்பு

2

-நமது நிருபர்-


நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியை விரிவுபடுத்தும் நோக்கில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டங்களில் கூட்டாளியாக இணைந்து பணியாற்ற உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்து, உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே ஆயுதங்கள், தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், சமீபகாலமாக உள்நாட்டிலேயே ஆயுதங்கள், தளவாட தயாரிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு ராணுவ தளவாட உற்பத்தி அதிகரித்து வருகிறது.

தற்போது இந்தியாவின் ஏவுகணைகள் மற்றும் குண்டு தயாரிப்பு திட்டங்களில் தனியார் துறை பங்கேற்பை விரிவுபடுத்தும் வகையில், உள்நாட்டு தனியார் நிறுவனங்களை கூட்டுப் பங்காளிகளாக இணைந்து செயல்பட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. ஏவுகணைகள் மற்றும் எதிர்கால ஆயுத அமைப்புகளின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் உள்நாட்டு தனியார் நிறுவனங்களை பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு திட்டத்திற்கும் குறைந்தபட்சம் இரண்டு நிறுவனங்கள் கூட்டாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, முன்மாதிரி தயாரிப்பு மற்றும் பெரிய அளவிலான உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் பாதுகாப்புத்துறை உபகரணங்கள் தயாரிப்புக்கான உரிமம், வெடிமருந்துகளைக் கையாள அனுமதி சான்று மற்றும் குறைந்தபட்சம் ரூ. 100 கோடி வருவாய் ஈட்டியிருக்கும் நிதித் தகுதி பெற்றிருக்க வேண்டும். தகுதி கோரும் நிறுவனங்களின் ஆய்வகங்களை டிஆர்டிஓவின் நிபுணர் குழு நேரடியாக ஆய்வு செய்து மதிப்பிடும்.

தகுதியுள்ள நிறுவனங்கள் தங்களுடைய தொழில்நுட்பத் திறன் மற்றும் நிதி விவரங்கள் அடங்கிய முன்மொழிவுகளை வரும் செப்டம்பர் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்; தகுதி பெறும் நிறுவனங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டிஆர்டிஓவின் திட்டங்களுக்கான தகுதிவாய்ந்த கூட்டாளிகளாகப் பட்டியலிடப் படுவார்கள். இந்தியா தனது உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் இறக்குமதிகளை குறைப்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Advertisement