இரட்டை ரயில்பாதை திட்டம் குறித்து துணை ஜனாதிபதியை சந்தித்த மக்கள்

கரூர்:கரூர் அருகே, விவசாய நிலங்கள் வழியாக புதிய இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம் குறித்து, பொதுமக்கள் துணை ஜனாதிபதியை சந்தித்தனர்.
கரூர்-ஈரோடு இடையே உள்ள, ஒற்றை ரயில் பாதையை, இரட்டை ரயில் பாதையாக மாற்றி அமைக்க சமீபத்தில், 986.35 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை ரயில்வே பாதைக்காக, நொய்யல், ஆத்துார் பகுதி விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நிலம் ஆய்வு செய்ய வந்த, ரயில்வே அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், முதல்வர் விஜய், கரூர் கலெக்டர் முத்துக்குமரன் ஆகியோருக்கு, பொதுமக்கள் புகார் மனுக்
களையும் அனுப்பினர்.
தொடர்ந்து, லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரையுடன், பொதுமக்கள் சார்பில், ஒன்பது பேர் கொண்ட குழுவினர் புதுடெல்லி சென்று, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரை சந்தித்து, தற்போது உள்ள பழைய ரயில் பாதையையொட்டி, புதிய இரட்டை ரயில் பாதை அமைக்க கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் நொய்யல், ஆத்துார் பகுதிகளில் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் வழியாக அமைய இருந்த, புதிய இரட்டை ரயில்வே பாதை அமைவிடம், மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, சமீபத்தில் திருச்சி வந்த துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை, நொய்யல், ஆத்துார் பகுதி மக்கள் சார்பில் லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர்
கமலகண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., வடிவேல் தலைமையில் சந்தித்து நன்றி
தெரிவித்தனர்.

Advertisement