வீடு கட்டும்போதே எதிர்கால பராமரிப்பு செலவை குறைக்கலாம்!

க ட்டட ஆயுளை நீட்டிக்க உதவும் பராமரிப்புக்கான செலவுகளை, முன்கூட்டியே திட்டமிட்டு வீடு கட்ட வேண்டும் என்கிறார், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க(காட்சியா) உறுப்பினர் மணிகண்டன் பாலாஜி.

அவர் கூறியதாவது:

கட்டட பராமரிப்பு என்பது கட்டடம் கட்டும் ஆரம்ப நிலையிலிருந்தே தொடங்க வேண்டும். கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், எதிர்கால பராமரிப்பு செலவுகளை குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது கட்டடத்தின் ஆயுளை அதிகரிக்கும்.

சிமென்ட், எம்.சாண்ட் அல்லது ஆற்று மணல், ஜல்லி, செங்கல், இரும்பு, மின் பொருட்கள், டைல்ஸ், பிளம்பிங் மற்றும் பெயின்ட் போன்ற அனைத்திற்கும் இந்திய தரநிலைகள் வாயிலாக குறிப்பிட்ட தரச்சோதனைகள் உள்ளன.

அந்த தரநிலைகளை பின்பற்றும் நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்துவது, கட்டடத்தின் பராமரிப்பு செலவுகளை குறைத்து, அதன் ஆயுளை அதிகரிக்கும். சரியான வேலைத்திறனும் அவசியம். தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டாலும், வேலை சரியாக இல்லையெனில் அதன் விளைவு தரமற்றதாக இருக்கும்.

கான்கிரீட் பணிகளின் போது, துருப்பிடிப்பை தடுக்கும், கான்கிரீட்டின் வலிமையை அதிகரிக்கும் சேர்மப் பொருட்களை பயன்படுத்துவது அவசியம். இது கட்டடத்தின் நீடித்த தன்மையை உயர்த்தும். கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர், கட்டடத்தின் ஆயுளை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று. எனவே, அந்த தண்ணீர் கட்டுமானத்திற்கு ஏற்றதா என்பதை பரிசோதிக்க வேண்டும். மண் பரிசோதனையும் அவசியம்.

பராமரிப்பை குறைக்கலாம்; முழுமையாக தவிர்க்க முடியாது. அனைத்து கட்டடங்களும் காலமுறைப்படி பரிசோதிக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.

சேதங்கள் ஏற்பட்டால், தகுதியான பொறியாளர் மேற்பார்வையில் சரியான முறையில் பழுது பார்க்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement