ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் முதல்வர் விஜய்; சொல்கிறார் உதயநிதி

68

சென்னை: 'தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வருவதாக நினைப்பில் எங்கள் மீது அடுக்கடுக்கான ஆதாரமில்லாத, பொய்யான குற்றச்சாட்டுகளை முதல்வர் விஜய் சுமத்தியுள்ளார்,' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டசபையில் பேச அனுமதிக்கப்படாததை கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதாவது; கடந்த வியாழக்கிழமை அன்று காவல்துறை மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சிகளின் சார்பாக பேசிய போது, பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தேன். தவெகவின் 116 நாள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டு போயிருக்கிறது என்று மிகத் தெளிவாக விளக்கமாக, ஆதாரங்களுடன் பேசியிருந்தேன்.


15 கேள்விகள்




இந்த அரசுக்கு 15 கேள்விகளை எழுப்பியிருந்தேன். நேரடியாக பதில் அளிக்குமாறு முதல்வரிடம் கேட்டிருந்தேன். இன்று முதல்வர் பதிலுரையை சொல்லியிருக்கிறார். சுமார் 45 நிமிடம் அவர் பேசினார். அதில், முதல் 10 முதல் 15 நிமிடம் ஆன்லைன் முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி பேசினார். அதனை நாங்கள் அமைதியாக கேட்டு வந்தோம். அதன்பிறகு, எந்தவித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளை எங்கள் மீது வைக்க ஆரம்பித்தார்.


பொய் குற்றச்சாட்டு




நீங்கள் ஆட்சிக்கு வந்ததை நம்புமாறு நான் ஏற்கனவே வியாழக்கிழமை பேசும் போது சொல்லியிருந்தேன். ஆனால், மீண்டும் திமுக ஆட்சி நடக்கிறது என்ற நினைப்பில், முதல்வர் பொய்யான குற்றச்சாட்டுகளை, சில கட்சிக் கூட்டங்களில் எங்களின் கட்சி பிரமுகர்கள் பேசியதை, சட்டசபையில் பேசி, அதனை எல்லாம் அவைக் குறிப்பில் பதிவேற்றினார். நானும், எங்களுடைய உறுப்பினர்களும் இதற்கு பதிலளிக்க வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டோம். ஆனால், சபாநாயகர் அதற்கு அனுமதி தரவில்லை.

தொடர்ந்து, முதல்வர் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தார். எந்தவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. நாங்கள் மீண்டும் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டோம். முதலில் ஒப்புக்கொண்ட சபாநாயகர், பிறகு வாய்ப்பை மறுத்து விட்டார். எங்களின் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக, முதல்வரின் பேச்சை முழுமையாக கேட்டு விட்டு, வெளிநடப்பு செய்து விட்டோம்.


மனப்பாடம்




கடந்த வியாழக்கிழமை இதுக்கெல்லாம் திங்கட்கிழமை பதில் சொல்வதாகக் கூறி விட்டு, வேகமாக ஓடிப்போய் விட்டார். நான் கூட தயார் செய்து விட்டு வருவார் என்று எதிர்பார்த்தோம். வியாழக்கிழமையன்று எப்படி ஓட்டப் பந்தயத்தில் ஓடுன மாதிரி ஓடினாரோ? அதேபோல இன்று மனப்பாடம் பண்ணிக்கொண்டு, ஒப்புவித்தல் போட்டி போல இன்று சட்டசபையில் தவறான தகவலை, பொய்யான குற்றச்சாட்டுகளை ஒப்புவித்துள்ளார்.


பஞ்ச் டயலாக்




நான் சொன்ன அதே பஞ்ச் டயலாக், அதே சினிமா வசனங்கள், அதே ஆக்டிங், ரீல்ஸ்க்காக மட்டுமே முதல்வர் இந்த பதிலுரையை சொல்லியிருக்கிறார். சட்டம் ஒழுங்கு தொடர்பாக நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல், திசை திருப்பும் சூழ்ச்சி தான் நடந்தது. திமுக நிர்வாகிகள் மீது வழக்கு இருந்தால், அதை நடத்துங்கள் என்று தான் நாங்கள் சொல்கிறோம்.

அவங்க (தவெக) கட்சிக்காரர்களே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்கள். சென்னையில் பட்டப்பகலில் இரு கொலை நடந்துள்ளது. அதைப் பேச வாய்ப்பு கேட்டேன். அதற்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதற்கு எல்லாம் பதில் சொல்லாமல், 1970க்கு போய் விட்டார்.


தகுதி இருக்கா?




மிசா பற்றி பேச இவருக்கு தகுதி இருக்கா? சர்க்காரியா கமிஷன் பற்றி இவருக்கு தெரியுமா? யாரோ எழுதிக் கொடுத்ததை 3 நாளாக மனப்பாடம் செய்து விட்டு, இங்கு வந்து வாந்தி எடுத்திருக்கிறாரா? கோடநாட்டில் தன்னுடைய படத்திற்காக வாட்ச் மேன் வேலை பார்த்துள்ளார். இவர் அரசியலுக்கு வந்ததும், ஆட்சியைப் பிடித்ததும் ஒரு விபத்து.

3 கோப்புகளை ஓபன் பண்ண சொன்னாங்க. அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் தான் படித்து காட்டுகிறார். திமுக தலைவர்களும், எம்எல்ஏக்களும், எம்பிக்களும் யாரும் ஊழல் செய்ததாக தண்டிக்கப்படவில்லை. முதல்வர் மீதே வருமான வரித்துறை வழக்கு இருக்கிறது. பொதுப்பணித்துறை மீது அமலாக்கத்துறை வழக்கு நடந்து கொண்டே இருக்கிறது.

அவர்களின் கட்சியில் சேர்த்திருக்கிறார்களே, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்கள், கு.ப.கிருஷ்ணன் ஆகியோரை வைத்துக் கொண்டு, எங்களைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. பெட்டி பெட்டியாக பணத்துடன் வந்து, ஆட்சியமைக்க ஆதரவு கேட்டதாக நேற்று முஸ்லிம் லீக் எம்எல்ஏ ஓபனாக சொல்லியுள்ளார்.


குதிரை பேரம்




வெளிப்படையாக குதிரை பேரத்தில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம் எங்களை மிரட்டுவதற்காக, கே.என்.நேரு வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். சட்டப்படி அனைத்தையும் சந்திக்க தயார். முதல்வரின் அலுவலகத்தில் உள்ள ஆலோசகர்களான விஷ்ணு ரெட்டி, சுஜய் ரெட்டி, அனில் ரெட்டி ஆகியோர் தான், அரசு நடத்தக்கூடிய கனிம வளங்களை முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். இது தொடர்பான ஆதாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுவேன்.

வக்கற்ற அரசு




நாங்க கேட்ட கேள்வி எதற்கும் பதில் சொல்ல முடியாத வக்கற்ற அரசு இப்போது அமைந்துள்ளது. முழுக்க முழுக்க சினிமா சூட்டிங்கிற்கு என்ன தேவையோ, அதை 3 நாளில் மனப்பாடம் செய்து விட்டு வந்து இங்கு பேசியுள்ளார். ஒருதலைபட்சமாக நடந்துக் கொள்ளக்கூடிய, சபாநாயகருக்கு கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement