'பை-பை' பாரிஸ்...'வெல்கம்' லாஸ் ஏஞ்சல்ஸ்: வண்ணமயமான நிறைவு விழா

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ல் துவங்கியது. 206 நாடுகளை சேர்ந்த 10, 714 பேர் பங்கேற்றனர். 17 நாள் நடந்த பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா நேற்று நிறைவு பெற்றது.

பாரிசின் ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நிறைவு விழா நடந்தது. இதை அரங்கில் இருந்து 80,000 ரசிகர்கள் கண்டு களித்தனர். பிரான்சின் நீச்சல் வீரர் லியான் மர்சந்த், ஒலிம்பிக் ஜோதி அருகே இருந்த விளக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு மைதானத்திற்குள் வந்தார். அனைத்து நாட்டு விளையாட்டு நட்சத்திரங்களின் அணிவகுப்பு நடந்தது. இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர், ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் சேர்ந்து மூவர்ணக்கொடியை ஏந்தி வந்தனர். உலகின் சிறந்த இசை கலைஞர்களின் ஆடல், பாடல், சர்க்கஸ் கலைஞர்களின் வித்தை, ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசம், பாலே நடனம் இடம் பெற்றன.

அடுத்த ஒலிம்பிக் போட்டி லாஸ் ஏஞ்சல்சில் 2028ல் நடக்க உள்ளது. பாராம்பரிய முறைப்படி பாரிஸ் மேயர் ஆன் ஹிடால்கோ, ஒலிம்பிக் கொடியை சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் தாமஸ் பாக்கிடம் அளித்தார். இதை, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாசிடம் வழங்கினார். பாரிஸ் ஒலிம்பிக் ஜோதி அணைக்கப்பட்டு, விழா முடிந்தது.
உலகம் முழுவதும் இருந்து வந்த வீரர், வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு 'குட்-பை' சொல்லி விடைபெற்றனர். அடுத்த ஒலிம்பிக் போட்டி வரும் 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ல்சில் நடக்க உள்ளது. இதை எதிர்பார்த்து விளையாட்டு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement