துணை முதல்வர் பதவி அல்ல; பொறுப்பு என்கிறார் உதயநிதி!

38

சென்னை: தமிழக துணை முதல்வராக இன்று (செப்.,29) மாலை 3.30 மணிக்கு நல்ல நேரத்தில் பதவியேற்க உள்ளார். 'துணை முதல்வர் என்பது பதவி அல்ல, பொறுப்பு' என இன்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.


இதற்கிடையே, துணை முதல்வராக உதயநிதி பதவி ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் உதயநிதி பதவியேற்பு ஆதரவு தெரிவித்து ஒரே குரலில் பேசி வருகின்றனர். அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிப்பதற்கும், செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமனம் செய்வதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது குறித்து பேசலாம்' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


சென்னை தீவுத்திடலில் போதையில்லா தமிழகம் என்ற மாரத்தான் போட்டியை, மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல்வர் ஸ்டாலின் செல்லும் இடத்தில் எல்லாம் பொதுமக்கள் உதயநிதிக்கு எப்பொழுது துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற கோரிக்கை விடுத்துக் கொண்டு இருந்தார்கள்.


நல்ல நாள்




பொதுமக்களின் கோரிக்கை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த திராவிட தொண்டர்களின் எதிர்பார்ப்பை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார். தமிழக அரசியல் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி நிறைந்த, பெருமை கொள்கிற, நல்ல நாள். உதயநிதி துணை முதல்வர் ஆவதற்கு முன்பாகவே, இளைஞர்கள் நலன் மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விளையாட்டுத்துறையில் தமிழகத்தை தலைமை இடமாக மாற்றி தந்திருக்கிறார்.


உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தான் பல்வேறு துறைகளில் பல்வேறு தரப்பினர் பெருமை அடைந்து இருக்கிறார்கள். பார்முலா கார் பந்தயமாக இருந்தாலும் சரி, முதல்வரின் கோப்பை என்ற போட்டியாக இருந்தாலும் சரி 2 கோடி இளைஞர்கள் சமுதாய சக்தியின், விழிப்புணர்வுக்காக விளையாட்டு துறையை உதயநிதி மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். 100 இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.


வாரிசு அரசியல்




வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது குறித்து பேசலாம். விமர்சிப்பவர்கள் வாரிசு அரசியலில் இருக்கிறார்களா என பார்க்க வேண்டும். வாரிசு இல்லாதவர்கள் இது குறித்து முன்னெடுத்து பேசுவது தான் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.




விமர்சிப்பவர்களுக்கு நன்றி

தமிழக துணை முதல்வர் இன்று(செப்.,29) பதவியேற்க உள்ள நிலையில், சென்னை, மெரினாவில் அண்ணாத்துரை, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மக்களுக்காக உழைப்பேன். மூத்த அமைச்சர்கள் வழிகாட்டுதலுடன் பணி செய்வேன். எனக்கு வாழ்த்து கூறியவர்கள், என்னை விமர்சிப்பவர்களுக்கு நன்றி.


விமர்சிப்பவர்களின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்படுவேன். என் பணியில் தவறு இருந்தால் அதை திருத்திக் கொள்வேன். எனது பணியின் மூலம் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பேன். துணை முதல்வர் என்பது பதவியல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து பணியாற்றுவேன். திமுக இளைஞரணி பொறுப்பு வழங்கப்பட்ட போதும் என்னை விமர்சித்தார்கள். விமர்சனங்களை வரவேற்கிறேன். இவ்வாறு உதயநிதி கூறினார்.

Advertisement