பெருங்களத்துார் - நெடுங்குன்றம் பணிக்கு... விடிவு!  மத்திய வனத்துறை அனுமதியால் நிம்மதி

பெருங்களத்துார்: பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில், நெடுங்குன்றம் மார்க்கமான பணிகளை துவக்க, மத்திய வனத்துறை அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, நிலத்திற்கான தொகையை நிர்ணயிக்கும் பணி துவங்கியுள்ளது. பல ஆண்டுகள் போராட்டத்திற்கு விடிவு கிடைத்துள்ளதால், ஓரிரு மாதங்களில், நெடுங்குன்றம் மார்க்கமான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகில், மாநில நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து, மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, 234 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்தன.

முதற்கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு - தாம்பரம் மார்க்கமான ஒருவழிப்பாதை பணிகள் முடிந்து, 2022 செப்டம்பரில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஓரளவிற்கு குறைந்தது.

போக்குவரத்து நெரிசல்



அடுத்தக்கட்டமாக, ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து, சீனிவாசா நகரில் இறங்கும் மற்றொரு பாதைக்கான பணிகள் வேகமாக நடந்து, 2023 ஜூனில் திறக்கப்பட்டன.

தொடர்ந்து, ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் மார்க்கமான பணிகளும் முடிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டன.

மூன்று மார்க்கமான பாதைகள் திறக்கப்பட்டதால், பெருங்களத்துாரில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

அடுத்ததாக, இம்மேம்பால திட்டத்தில், நெடுங்குன்றம் மார்க்கமான பாதை மட்டுமே உள்ளது. இப்பாதை அமையவுள்ள இடத்தின் பெரும் பகுதி, வனத்துறைக்குச் சொந்தமானவை.

இதற்காக அனுமதி கேட்டு, வனத்துறைக்கு நெடுஞ்சாலைத் துறையினர் கடிதம் எழுதினர்.

இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அக்கடிதத்தை, தமிழக வனத்துறை இந்தாண்டு துவக்கத்தில், மத்திய வனத்துறைக்கு அனுப்பியது.

அதே நேரத்தில், பெருங்களத்துார் வழியாக ராஜகீழ்ப்பாக்கத்தை இணைக்கும் தாம்பரம் ஈஸ்டர்ன் புறவழிச்சாலை திட்டத்திற்கும் நிலம் கேட்டு, மத்திய வனத்துறைக்கு கடிதம் சென்றுள்ளது.

இரண்டு கடிதங்களையும் பார்த்த மத்திய வனத்துறை அதிகாரிகள், இரண்டும் ஒரே திட்டம் என புரிந்துகொண்டு, தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினர்.

பின், இரண்டும் வேறு வேறு திட்டங்கள் என அவர்களுக்கு புரிய வைத்து, இரண்டாவது முறையாக நிலம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.

அகற்றும் நடவடிக்கை



மற்றொருபுறம், மேம்பாலப்பாதை இறங்கும் இடத்தில், துணை மின் நிலையம் உள்ளது. அவற்றை எடுத்து, வேறு இடத்தில் அமைக்க, மின் வாரியத்திற்கு, 23 கோடி ரூபாயை, கடந்த மார்ச் மாதம், நெடுஞ்சாலைத் துறை செலுத்தியுள்ளது.

அதனால், அங்குள்ள துணை மின் நிலையத்தை அகற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின், நெடுங்குன்றம் மார்க்கமான பாதை பணிகளுக்கு, மத்திய வனத்துறை அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், அடுத்தகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இதில், நிலத்திற்காக வனத்துறை கேட்கும் பணத்தை செலுத்தி, பணிகளை துவக்கி விரைந்து முடிக்க, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓரிரு மாதங்களில், நெடுங்குன்றம் மார்க்கமான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெடுங்குன்றம் சாலை மார்க்கமான மேம்பாலப் பணிக்கு 0.9 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. மத்திய வனத்துறை அனுமதி வழங்கியதை அடுத்து, நிலத்திற்கான உரிமை மற்றும் கையகப்படுத்தப்பட உள்ள நிலத்திலுள்ள மரங்களின் மதிப்பிற்கான தொகை நிர்ணயம் செய்யப்படும். பின், டெண்டர் கோரப்பட்டு, நெடுங்குன்றம் மார்க்கமான பணிகள் துவங்கும். அடுத்தாண்டு பணிகள் துவங்கி, ஆறு மாதங்களில் முடிக்கப்படும்.

- நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்

6 மாதத்தில் முடியும்



பெருங்களத்துார் பகுதிக்குள் செல்ல, 2 கி.மீ., துாரம் சென்று திரும்பி வந்து, ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டியுள்ளது. நெடுங்குன்றம் சாலை மார்க்கமான பணிகளை துவக்க, மத்திய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது என்பது மகிழ்ச்சி. அதிகாரிகள் இவ்விஷயத்தில் முனைப்பு காட்டி, வனத்துறை கேட்கும் பணத்தை செலுத்தி, பணிகளை துவக்கி விரைந்து முடித்தால், தாம்பரத்தில் நிலவும் நெரிசலும் குறையும்.

- குடியிருப்போர் நலச்சங்கத்தினர்,

பெருங்களத்துார்.

நெரிசல் குறையும்

Advertisement